அர்ஜூன் சிங்கை அழ வைத்த காங்கிரஸ்!
லோக்சபா தேர்தலில் தனது மகன் அஜய் சிங்குக்கு மத்தியப் பிரதேசத்தின் சிதி தொகுதியிலும், மகள் பீனா சிங்குக்கு சாத்னா தொகுதியிலும் டிக்கெட் கேட்டிருந்தார் அர்ஜூன் சிங்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் மறுத்து விட்டது. இதையடுத்து அவரது மகள் சாத்னா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
இருப்பினும் கட்சிதான் முக்கியம், மகளுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன். காங்கிரஸ் வேட்பாளரைத்தான் ஆதரித்துப் பிரசாரம் செய்வேன் என்று கூறியிருந்தார் அர்ஜூன் சிங்.
வெளிப்படையாக அவர் அவ்வாறு கூறினாலும் கூட உள்ளுக்குள் மகனுக்கும், மகளுக்கும் சீட் மறுக்கப்பட்டதால் அப்செட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
இதை பாலியாவில் இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அழுது வெளிப்படுத்தினார் அர்ஜூன் சிங். பாலியாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோது திடீரென கண்ணீர் விட்டு அழுதார் அர்ஜூன் சிங்.
அவரை சீலாம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் போலா பான்டே சமாதானப்படுத்தினார். இருப்பினும் அர்ஜூன் சிங்கின் கண்ணீர் நின்றபாடில்லை. பின்னர் தன்னை சமாளித்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் அர்ஜூன் சிங்.
ஆனால் மகன், மகளுக்கு சீட் மறுக்கப்பட்டதால் அர்ஜூன் சிங் கோபமாக இருக்கிறார் என்று கூறப்படுவதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
இதுகுறித்து மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், ஒரு தந்தையாக நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன் என்றுதான் என்னிடம் அர்ஜூன் சிங் கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது.
எனது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தால் கூட நானும் அர்ஜூன் சிங் போலத்தான் வருத்தப்பட்டிருப்பேன்.
தான் யார் மீதும் கோபமாக இருப்பதாக என்னிடம் அர்ஜூன் சிங் கூறவில்லை என்றார் கபில் சிபல்.