கழுத்தை வெட்டு-கர்நாடகத்தில் ஒரு 'வருண் காந்தி'!
தாவணகரே: இந்துத்வாவை யார் எதிர்த்தாலும் அவர்களது கழுத்தை வெட்ட வேண்டும் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிபித் தொகுதியில் இஸ்லாமியர்களின் கைகளை, கழுத்தை வெட்ட வேண்டும் என்று பேசி சிக்கலில் சிக்கி இப்போது சிறையில் அடைபட்டிருக்கிறார் வருண் காந்தி.
இந்த நிலையில் அவர் சார்ந்த பாஜகவைச் சேர்ந்த கர்நாடக எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியாவும் இதே போல பேசி பரபரப்ப ஏற்படுத்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹொன்னாளி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏவும், ஹட்டி தங்கச்சுரங்க நிர்வாக இயக்குனருமான ரேணுகாச்சார்யா, தாவணகரேயில் நிருபர்களிடம் பேசுகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை பெற, இந்துக்களின் மனதை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தினர் புண்படுத்தி வருகின்றனர்.
யாரேனும் இந்துக்களின் மனதை புண்படுத்தினால், அவர்களின் கழுத்தை வெட்டுங்கள் என்றார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிருபர்கள், வருண்காந்தியை விட வன்முறையத் தூண்டும் வகையில் பேசுகிறீர்களே என்றனர். அதற்கு அவர், நான் கூறியதில் இருந்து பின்வாங்க விரும்பவில்லை. இதுவே எனது கருத்து.
சிறுபான்மையினரின் கழுத்தை வெட்டுங்கள் என்று நான் கூறவில்லை. இந்துத்வா கொள்கைகளை திணிக்க முயற்சிப்பர்களின் கையை வெட்டுங்கள் என்று, காங்கிரஸ் தலைவர் காகோடு திம்மப்பா கூறியிருந்தார். இதுபோல் கருத்து சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராகவே எனது கருத்தை கூறினேன் என்றார்.
குரலை பதிவு செய்ய மறுக்கும் வருண்:
இதற்கிடையே எடாவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருண் காந்தியின் குரலை பதிவு செய்யும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் சிறைக்குச் சென்று வருண் காந்தியின் குரலை பதிவு செய்ய முயன்றனர்.
ஆனால் தனது வக்கீல் இல்லாமல் தனது குரலை பதிவு செய்யவோ, வாக்கு மூலம் அளிக்கவோ முடியாது என்று வருண் மறுத்து விட்டார்.
முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன் என்று பேசிய அவர் இது தொடர்பாக வீடியோ, டேப்பில் உள்ளது தனது குரல் அல்ல என மறுத்து வருகிறார்.
இதனால் தான் அவரை குரலை பதிவு செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.