காங் வேட்பாளர் மனு தள்ளுபடி-சுஷ்மாவுக்கு யோகம்
போபால்: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவுக்கு துவங்குவதற்கு முன்பே பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் வெற்றி எளிதாகியுள்ளது. அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அவரது மாற்று வேட்பாளர் இருவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
மத்தியப் பிரதேசம் மாநிலம் விதிஷா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சுஷ்மா சுவராஜ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இங்கு காங்கிரஸ் சார்பில் ராஜ்குமார் படேல் வேட்பு மனு தாக்கல் முடிய ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தபோது வந்தார்.
அப்போது அவரது வேட்பு மனுவில் படிவம் 'ஏ'யின் அசல் இணைக்கப்படாததும், அது போபாலில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போபாலில் இருந்து அவசரமாக அதை கொண்டு வரச் சொன்னார். படிவம் 'ஏ' வருவதற்கு தாமதமாகும் என்பதை அறிந்த அவர் தனது தம்பியை வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நேரம் முடிய போவதை அறிந்த அவர் படிவம் 'ஏ'யின் அசலை இணைக்காமல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று வேட்புமனுக்களை பரிசீலனை செய்த போது மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் யாதவ், அவரது மனுவில் படிவம் ஏயின் அசல் இணைக்கப்படவில்லை என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவரது தம்பியின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சுஷ்மாவுக்கு கடும் சவால் கொடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எண்ணத்துக்கு பெரும் அடி விழுந்துள்ளது. முக்கிய வேட்பாளர் இல்லாத நிலையில் சுஷ்மாவின் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.