பெளர்ணமி-அதிமுக வேட்பாளர்கள் 9ம் தேதி அறிவிப்பு?
சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பெளர்ணமி தினமான வரும் 9ம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்றது. மற்ற கட்சிகளைப் போல ஒவ்வொரு வேட்பாளராக அழைத்துப் பேசாமல் விண்ணப்பித்த சுமார் 3,500 பேரையும் 9 குழுக்களாகப் பிரித்து ஜெயலிதா பேசினார்.
விருப்ப மனு செய்தவர்களுடன் அந்த தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்களும் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், நான் உங்களது விண்ணப்பங்களை படித்து ஆராய்ந்தேன். நீங்கள் அனைவருமே சிறந்தவர்கள் தான். ஆனாலும் தொகுதிக்கு ஒருவரைத் தானே தேர்வு செய்ய முடியும்.
நான் தேர்வு செய்யும் நபருக்கு மற்றவர்கள் முழு ஆதரவு தர வேண்டும். அம்மாவே (தன்னைத் தான் சொல்கிறார்) நிற்பதாக எண்ணி 40 தொகுதிகளிலும் பணியாற்றி வெல்ல வேண்டும் என்றார். இது தான் அவர் நடத்திய 'நேர்காணல்'.
இந்த 'நேர்காணல்' படலம் முடிந்துவிட்ட நிலையில், ஏற்கனவே ஜாதகம் பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்ட ஜெயலலிதா
அதிமுக வேட்பாளர் பட்டியலை 9ம் தேதி வெளியிடுவார் என்று தெரிகிறது.
ஏப்ரல் 9ம் தேதி பெளர்ணமி என்பதால் அன்றே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.