வேட்பாளர் தேர்வில் தமிழக காங்கிரஸ் மும்முரம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது.
கூட்டணிக் கட்சியான திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீனே மீண்டும் போட்டியிடுகிறார். நாளை விடுதலைச் சிறுத்தைகள் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது.
மிச்சமிருப்பது காங்கிரஸ் மட்டுமே. காங்கிரஸில் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. அடுத்து கோஷ்டிப் பங்கீடு களை கட்டியுள்ளது.
ஜி.கே.வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், தங்கபாலு, பிரபு என ஏகப்பட்ட கோஷ்டிகள் இருப்பதால் 15 சீட்களையும் பகிர்ந்தளிப்பதில் கவனமுடன் இருக்கிறது கட்சி மேலிடம்.
தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்துள்ளனர். இந்த விவரங்களை டெல்லியில் உள்ள மேலிடத்தில் கொடுத்து அவர்கள் மூலமாகவே வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளது காங்கிரஸ்.
வேட்பாளர் தேர்வுக் குழுவில் உள்ள ஏ.கே.அந்தோணி, பிருத்விராஜ் செளகான், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோர்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்யப் போகிறார்கள்.
இவர்களிடம் உத்தேச வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைமை அளிக்கும். அதை இந்த மூவர் குழு பரிசீலித்து வேட்பாளர்களை இறுதி செய்யும்.
ஏற்கனவே சீட் வாங்கி விட வேண்டும் என்பதற்காக முக்கிய தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் தேர்தல் துணைக் குழு கூடி ஆலோசித்தது. பின்னர் எம்.எல்.ஏக்களைக் கூட்டி ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர்களைக் கூப்பிட்டு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் விவாதிக்கப்பட்ட விவரங்களை கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளனர். நாளை கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழு கூடுகிறது. அக்கூட்டத்தில் தங்கபாலு உள்ளிட்டோர் அடங்கிய தமிழ காங்கிரஸ் கட்சிக்கான ஐவர் குழுவும் பங்கேற்கிறது. அப்போது வேட்பாளர் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
தற்போது எம்.பிக்களாக இருக்கும் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட் கிடைக்கும். இவர்கள் போக மற்ற தொகுதிகளுக்கு மட்டுமே தற்போது வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை அங்கு நாராயணசாமி போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
நாராயணசாமி தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். ஆனால் லோக்சபா மூலம் தேர்ந்தெடுக்கப்பட அவர் விரும்புகிறார். எனவே லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின்னர் அவர் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார்.
அந்தப் பதவி வேறு ஒரு கோஷ்டிக்குக் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.