திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் தேமுதிக!-பாஜக
சென்னை: திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து அவர்களுக்கு உதவத் தான் தேமுதிக களமிறங்கி உள்ளது. எனவே தேமுதிகவை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,
பாஜக ஆட்சிக் காலம் இந்தியாவின் பொற்காலம். வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. காங்கிரஸ் அரசு ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. நாடுமுழுவதும் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது.
3வது அணியின் பிரதமர் யார் என்பதே தெரியவில்லை. மன்மோகன் சிங் சோனியாவின் கைப்பாவையாக இருக்கிறார். இவர் பிரதமர் ஆக வேண்டுமா? இரும்பு மனிதர் அத்வானி பிரதமர் ஆக வேண்டுமா?.
பாஜக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டந. சென்னை- கொல்கொத்தா தங்க நாற்கர சாலை இருக்கும் வரை வாஜ்பாய் பெயர் மக்கள் மனதில் இருக்கும்.
வாக்காளர்கள் வேட்பாளரை பற்றி சிந்திக்க வேண்டும் அவர் சார்ந்த கட்சியின் பின்னணியையும் சிந்தியுங்கள். கொள்கை, லட்சியத்துக்காக கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள். பின்னர் அதிகார பயனை அடைவதற்காக எல்லாவற்றையும் கைவிட்டு விடுகிறார்கள்.
தேமுதிக தனித்து நிற்பது நாட்டுக்கு நல்லதல்ல...
விஜயகாந்த் தனித்து நிற்பதாக சொல்கிறார். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதற்காகத்தான் தேமுதிக களம் இறங்கியுள்ளது.
இவர்கள் தனியாக நிற்பது நாட்டுக்கு நல்லதல்ல. வெற்றி பெற்றாலும் பயனில்லை. ஒட்டுமொத்தமாக மக்கள் தேமுதிகவை நிராகரிக்க வேண்டும்.
இது அதிமுகவா... திமுகவா... என்பதை முடிவு செய்யும் தேர்தல் அல்ல. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று சிந்தியுங்கள். வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்று பார்க்காதீர்கள். யார் வெற்றி பெறுவது நாட்டுக்கு நல்லது என்று வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள்.
அப்சல் குருவை தூக்கில் போடுவோம்...
பாஜக ஆட்சியின் போதும் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்தோம். தண்டனையும் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் அப்சல் குருவை தூக்கில்போட காங்கிரஸ் அரசு தயங்குகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அப்சல்குருவை தூக்கில் போடுவோம். பயங்கரவாதத்தை ஒடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்றார் கணேசன்.