ரூ. 17 லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்- 4 பேர் கைது
சேலம் : சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 17 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி மற்றும் 5 ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் அஸ்தம்பட்டி மற்றும் 5 ரோடு பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் அஸ்தம்பட்டி பகுதியில் சந்தோஷ் என்பவரும், 5 ரோடு பகுதியில் குப்பன், கண்ணன், பரதன் ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்திய 17 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications