மதிமுகவிலிருந்து யாரும் பேசவில்லை: இல.கணசன்
சென்னை: மதிமுகவிலிருந்து எந்தத் தலைவரும் இதுவரை பாஜகவுடன் பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று பேசுகையில், முதல் கட்டமாக நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், வடசென்னை, தென்சென்னை, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட தேர்தல் குழு முடிவு செய்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உடன்பாடு ஏற்பட்டால் 2ம் கட்டமாக நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம்.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிட வாய்ப்புள்ளது. மதிமுக தரப்பில் இருந்து யாரும் எங்களுடன் பேச்சு நடத்தவில்லை.
விஜயகாந்த் மீது பாய்ச்சல்..
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற விஜயகாந்த் சட்டமன்றத்துக்கு சரியாக வரமுடியவில்லை.
மக்களவை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் இவரை போலத்தான் இருப்பார்கள்.
அவரது மாயாஜாலத்தை பார்த்து ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. அவரது கட்சியை முதலில் புறக்கணிக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் பாஜகவை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டன. இதனால் தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குக் கொண்டு வர கடுமையாக முயன்று வந்தது பாஜக.
ஆரம்பம் முதலே தேமுதிகவை தன்னுடன் இணைத்துக் கொள்ள அது கடுமையாக முயன்றது. ஆனால் அதில் சிக்காமல் நழுவி விட்டார் விஜயகாந்த்.
இந்த நிலையில் மக்கள் தேமுதிகவை வருகிற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளார் இல.கணேசன்.