For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தயாநிதியை மீண்டும் டெல்லிக்கு அனுப்புங்கள்-ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திற்கு மேலும் பல நல்ல திட்டங்கள் கிடைக்க தயாநிதி மாறனை மீண்டும் எம்.பியாக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்புங்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட எழும்பூர் பகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக முதல்வரால் உங்களிடம் தயாநிதி மாறன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சிறப்புகளை எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. அது கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல ஆகும்.

எத்தனையோ கட்சிகள் 'வானத்தை கிழிப்போம், மணலை கயிறாக திரிப்போம்" என்பார்கள். தேர்தல் முடிந்ததும் அதுபற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், நம் முதல்வர் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்பவர்.

ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு தருவேன் என்றார். ஒரு ரூபாய்க்கு தருகிறார். ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு 15 ஆயிரம் தருவேன் என்றார். 20 ஆயிரம் தருகிறார். சத்துணவில் வாரம் 2 முறை முட்டை என்றார். 3 முறை முட்டை தருகிறார்.

இப்போது பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலங்கள், முதல்வர் கருணாநிதி தந்த தேர்தல் அறிக்கை புத்தகத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு மூலம் தமிழகத்துக்கு இதுவரை இந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்கள் வந்ததில்லை. முதல்வர் என்ன கோரிக்கை வைத்தாலும் அதை நிறைவேற்றும் மத்திய அரசை நாம் பெற்றிருக்கிறோம்.

சென்னையின் முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னையை தீர்க்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

அந்த திட்டத்தை ஜெயலலிதா முடக்க பார்த்தார். மத்திய அரசின் கடிதங்களுக்கு பதில் அனுப்பாமல் அலட்சியப்படுத்தினார். மீண்டும் நம் ஆட்சி வந்ததும், நான் டெல்லி சென்று நிதி ஒதுக்குங்கள். திட்டத்தை நிறைவேற்றுகிறோம் என்றேன். 1000 கோடி நிதி ஒதுக்கியது. விரைவில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

அதேபோல, முதல்வரின் லட்சியமான கூவத்தை சீர்படுத்தவும் மத்திய அரசு நிதி ஒதுக்க தயாராக இருக்கிறது.

இந்த திட்டங்கள் தொடர, மேலும் பல திட்டங்கள் கிடைக்க தயாநிதி மாறனை டெல்லிக்கு அனுப்புங்கள். திமுக அணிக்கு வெற்றி தேடி தாருங்கள் என்றார் ஸ்டாலின்.

தயாநிதி மாறன் பேசுகையில், கடந்த முறை எனக்கு தந்த அதே ஆதரவை இந்த முறையும் தாருங்கள்.

வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பொருளாதார வீழ்ச்சி எனும் சுனாமியில் சிக்குண்டு தவிக்கின்றன. ஆனால், அந்த சுனாமி இந்தியா பக்கம் தலைகாட்டவில்லை. அதற்கு காரணம் சோனியாவும், மன்மோகன்சிங்கும்தான்.

ஈ அடிச்சான் காப்பி அடிக்கிறார்கள்..

முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறிய கலர் டிவி, இலவச நிலம், இலவச எரிவாயு அடுப்பு போன்ற திட்டங்களை இன்று எல்லா மாநிலங்களும் 'ஈ அடிச்சான் காப்பி" அடிக்கின்றன.

ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் முதல்வர் ஆட்சி நடத்துகிறார்.

உங்களுக்கு இதுவரை டிவி வராவிட்டால் தேர்தல் முடிந்ததும் தானாக வரும். 60 சதவீத டிவிக்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டுக்குள் 1 கோடியே 6 லட்சம் டிவிக்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பணிகள் தொடர திமுக அணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

முன்னதாக, மறைந்த திமுக முன்னணித் தலைவர் நாஞ்சில் மனோகரன் வீட்டுக்கு மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் சென்றனர்.

அவர்களை நாஞ்சில் மனோகரன் மனைவி இந்திரா, மகன் கிருஷ்ணா மற்றும் நாஞ்சில் மனோகரனிடம் உதவியாளராக இருந்த சின்னி கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X