டெபாசிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் அபாயம்!
மும்பை: பொதுமக்களின் டெபாஸிட்டுகளுக்கு மேலும் வட்டி குறைக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்க தலைவர் டிஎஸ் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்புச் சலுகைகளைப் பொதுமக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துவது குறித்து நடந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கித் தலைவர் டி சுப்பாராவவுடன் பேசினார் நாராயணசாமி.
பின்னர் அவர் கூறியதாவது:
"ரிசர்வ் வங்கி மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இனி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இடமில்லை. வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். ஆனால் வங்கி நடைமுறைகள் இதற்கு இடமளிக்கவில்லை.
இப்போது குறைக்கப்பட்டுள்ள கடன் வழங்கல் வட்டியைச் சரிகட்ட, பொதுமக்களின் வைப்புகளுக்கு வங்கிகள் வழங்கும் வட்டியைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த பதினைந்து நாட்களுக்குள் அனைத்து வங்கிகளும் வைப்புத் தொகை வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளன", என்றார்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி இன்னும் 2 சதவிகிதம் அளவுக்கு முதன்மைக் கடன் வழங்கலுக்கான (PLR) கடன்களுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வணிக வங்கிகளும் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இல்லை எந்த வங்கியும். மாறாக மக்களின் வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியில் கை வைக்க முடிவு செய்துவிட்டன.
இது கடன் வழங்கலை மட்டுமல்ல, மக்களின் சேமிப்பையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பணம் தேக்கம்!
இன்னொரு பக்கம், கடன்களுக்கான வட்டிகள் குறையாமலே உள்ளதாலும், கடன் வழங்கும் நடைமுறைகளை வங்கிகள் மிகவும் கடினமாக்கி வைத்திருப்பதாலும் அனைத்து வணிக வங்கிகளிலும் ரூ.1,22,000 கோடிக்கும் அதிகமாக பணம் தேங்கி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் முழுவதும் ரிசர்வ் வங்கியில் 3.5 சதவிகித வட்டியில் டெபாஸிட்டாக வைக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் பெற ஆர்வம் காட்டததாலும், பொதுமக்கள் கடன் பெறும் அளவு 34 சதவிகிதம் குறைந்துவிட்டதாலும் இந்த நிலை என்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓபி பட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications