காஷ்மீருக்குள் தலிபான் தீவிரவாதிகள் ஊடுருவல்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து கடந்த மாதம் மட்டும் சுமார் 34 தலிபான் தீவிரவாதிகள் உட்பட 40 தற்கொலை படை தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் முக்கிய தலைவர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். அது முடியாத பட்சத்தில் குறைந்தது ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்திருப்பதாக தெரிகிறது.
உளவுத்துறையின் தகவல்படி காஷ்மீரில் தற்போது வெளிநாட்டு தீவிரவாதிகள் 500 பேர் மற்றும் உள்ளூர் தீவிரவாதிகள் 400 பேர் என மொத்தம் 900 பேர் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் 400 பேர் இந்தியாவுக்குள் எந்நேரமும் ஊடுருவ தயாராக இருப்பதாக உளவு துறை தெரிவித்துள்ளது.
வழக்கமாக பனி பொழிவு அதிகமிருக்கும் காலங்களில் கூட்டம் கூட்டமாக இந்தியாவுக்குள் நுழையும் தீவிரவாதிகள் 2004ல் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா பாதுகாப்பு வேலி அமைத்தவுடன் தங்களது தந்திரங்களை மாற்றியுள்ளனர்.
தற்போது இந்திய பகுதியில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஊடுருவி வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தான் மண்ணில் 40 தீவிரவாத முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இவர்களை கண்காணிக்கவும், தடுத்து நிறுத்தவும் மிக் 17 ரக விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்துக்கு பின் இந்தியாவுக்குள் 40 தீவிரவாதிகள் வரை ஊடுருவிருப்பதாக தெரிகிறது. இவர்களில் 34 பேர் தலிபான் திவீரவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தலிபான்கள் முல்லா ஓமர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கான் தலிபான்கள் அல்ல என்றும், பைதுல்லா மெசூத் தலைமையில் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தலிபான்கள் என்றும் தெரிகிறது.
இது குறித்து உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இதை ஊடுருவல் என்று கூற முடியாது. அவர்கள் சண்டை போடுவதற்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் பலுசிஸ்தானை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். கூலிக்கு கொடூரம் செய்ய வந்திருக்கிறார்கள். அவர்கள் தலிபான்களாகவும் இருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications