லாரி-ஆம்னி பஸ் மோதல் 2 பேர் பலி-16 பேர் காயம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ், டாடாசுமோ அடுத்தடுத்து மோதியதில் அதே இடத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக ஆம்னி பஸ் மோதியது.
இதை தொடர்ந்து ஆம்னி பஸ்சிற்கு பின்னால் வந்து கொண்டிருந்த டாடா சுமோ ஒன்று, ஆம்னி பஸ் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மதுரை சிங்கப்பூர் நகரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மகன் ராமலிங்கம் (12) என்ற சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த மதுரை பொறியாளர் நகரைச் சேர்ந்த கேசவன் ராமானுஜம் (55), திவாகர் ஷெரீப், சையது உட்பட 12 பேரும், காரில் பயணம் செய்த மதுரை முருகானந்தம் மற்றும் அவரது மனைவி கார் டிரைவர் ராஜா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள்.
இதில் அதிக காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கேசவன் ராமானுஜம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 16 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அவ்வழியே சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications