டைட்லர், ஷஜ்ஜன் போட்டியில்லை-காங். அறிவிப்பு
டெல்லி: ஜெகதீஷ் டைட்லர், ஷஜ்ஜன் குமார் ஆகியோருக்கு எதிராக சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் குதித்திருப்பதையடுத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை செயலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதிஸ் டைட்லருக்கு தொடர்பு இருப்பதாக நானாவதி கமிஷன் அறிவித்தது.
அதன்பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ டைட்டலர் மற்றும் ஷஜ்ஜனை நிரபராதி என கூறி விடுவித்தது. இதையடுத்து டைட்லர் வடகிழக்கு டெல்லியிலும், ஷஜ்ஜன் தெற்கு டெல்லியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங், உள்துறை அமைச்சர் மீது ஷூவை வீசினார். இதை தொடர்ந்து டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று டைட்லர், ஷஜ்ஜன் ஆகியோர் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், டைட்லர், ஷஜ்ஜன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அவர்கள் கட்சிக்காக உழைப்பார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications