யாரும் கூப்பிடல...10 தொகுதிகளில் தனித்து போட்டி
சென்னை: எந்தக் கூட்டணியிலும் கூப்பிடாததால், புதிய நீதிக் கட்சி தனித்துப் போட்டியிடப் போகிறது. 10 தொகுதிகளில் அவர்கள் போட்டியிடவுள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தோன்றிய கட்சி புதிய நீதிக் கட்சி. முதலியார், பிள்ளைமார் உள்ளிட்ட சமூகத்தினரை குறி வைத்து இந்தக் கட்சி தொடங்கப்பட்டது.
கடந்த தேர்தலில் அதிமுகவை இக்கட்சி ஆதரித்தது. இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. ஆனால் இதயத்தில் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை.
வேறு யாரும் கூட்டணிக்குக் கூப்பிடவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய புதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், கட்சிக்கு பலம் வாய்ந்த அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம் ஆகிய 10 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அரக்கோணம் தொகுதிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் டபிள்யூ.பி.பழனி, திருவண்ணாமலை தொகுதிக்கு இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம் ஆகியோரை வேட்பாளராக ஏ.சி.சண்முகம் அறிவித்தார்.
மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் 10 தொகுதிகள் போக மற்ற 30 தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை 15-ந் தேதிக்குள் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.