காற்றழுத்த தாழ்வு-தென் தமிழகத்தில் திடீர் மழை
சென்னை: வங்க கடலில் ஏற்பட்டுள்ள திடீர் புயல் சின்னத்தையடுத்து தமிழகத்தின் தென் பகுதியிகளில் கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. சேலத்தில் 102 டிகிரி வரை சென்று மக்களை வாட்டி எடுத்தது.
இந் நிலையில் வங்கக்கடலில் தமிழ்நாட்டுக்கு தென் கிழக்கே இலங்கைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு கோடை வெயிலுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துள்ளது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடி மற்றும் மின்னலுடன் ஆரம்பித்த மழை நிற்காமல் விடிய விடிய பெய்தது. இதனால் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. நாகர்கோவிலில் நீர் வெள்ளம் போல சாலைகளில் கரைபுரண்டு ஓடியது.
தென் தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களில் மழை பலமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இன்று காலை 8.30 மணி வரை 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர், நாகையில் பலத்த மழை பெய்துள்ளது.
புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications