10 ஆண்டுக்கு பின் தேர்தலில் போட்டியிடும் வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
விருதுநகர்: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போட்டியில் குதித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் வைகோ. தனது சிம்மக் குரலால் நாடாளுமன்றத்தை கிடுகிடுக்க வைத்தவர். சிறந்த நாடாளுமன்றவாதி என புகழப்பட்டனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றம் வைகோவை மிஸ் செய்து வந்தது. காரணம், 1999ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் வைகோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி என்ற கிராமத்தில் வையாபுரி தம்பதிக்குப் பிறந்தவர்தான் வை. கோபாலசாமி. பெயர் வை. கோபாலசாமி என்றாலும் வைகோ என்று அனைவராலும் அழைக்கப்பட்டமையால் பின்னாளில் தனது பெயரையே வைகோ என்று மாற்றிக் கொண்டு விட்டார் வைகோ.

மனைவி பெயர் ரேணுகாதேவி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

எம்.ஏ பொருளாதாரம், பி.எல். படித்தவர் வைகோ. பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும், சென்னை மாகாணக் கல்லூரி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியிலும் பயி்ன்றவர்.

அரசியல்வாதி என்ற முகம் தவிர விவசாயி, வழக்கறிஞர் என்ற முகங்களையும் கொண்டவர் வைகோ.

1978ம் ஆண்டு முதல் 1996 வரை மூன்று முறை திமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ளார்.

1994ம் ஆண்டு திமுகவை விட்டு நீக்கப்பட்டபோது கண்கலங்கியபடி வெளியேறி புயல் வேகத்தில் மதிமுகவை உருவாக்கி அதன் பொதுச் செயலாளரானார்.

1996ம் ஆண்டு திமுக, அதிமுக அணிகளை எதிர்த்து சிபிஎம், ஜனதாதளம் ஆகியவற்றுடன் இணைந்து தனி அணியாக சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். அப்போது விளாத்திகுளம், சிவகாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

இருப்பினும் 1998ம் ஆண்டு சிவகாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மீண்டும் 1999ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் தவிர்த்து வந்தார். 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசியில் மதிமுகவின் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் போட்டியிட்டு வென்றார்.

தற்போது சிவகாசி தொகுதி நீக்கப்பட்டு விருதுநகர் தொகுதியாகியுள்ளது. இந்தத் தொகுதியின் முதல் எம்.பி. ஆகும் பெருமை வைகோவுக்கு கிடைக்குமா என்பது மே 16ம் தேதி தெரிய வரும்.

10 ஆண்டு காலத்திற்குப் பின்னர் முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார் வைகோ. மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் புகுந்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக திமுக, அதிமுக வேட்பாளர்களுக்காக மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்த இந்த 'புரட்சிப் புயல்', விருதுநகரை தன்வசப்படுத்துமா என்பதைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியல் உலகமுமே ஆவலுடன் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+