இன்று காங்கிரஸ் முதல் பட்டியல்!
டெல்லி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று தெரிகிறது.
இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிகத்தில் 15 தொகுதிகளிலும், புதுச்சேரி உள்ள ஒரே தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் சார்பில் களமிறங்க 880 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இவர்களை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகிய 5 பேர் கொண்ட குழு பரிசீலித்து தொகுதிக்கு மூவர் வீதம் பட்டியலை தயாரித்தது.
தங்களது கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கு இதில் அதிகபட்ச இடங்களை இவர்கள் தந்துள்ளனர். இந்தப் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சோனியா.
இவர்கள் தமிழக ஐவர் குழுவுடன் பேசி பட்டியலை தயார் செய்து சோனியாவிடம் ஒப்படைத்தனர். இதை மத்திய தேர்தல் குழு பரிசீலித்து பட்டியலை முடிவு செய்துவிட்டது.
இந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், எம்பிக்கள் தங்கபாலு, பிரபு ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துவிட்டனர்.
இவர்கள் தவிர தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள சிலரது பெயர்களை கட்சி மேலிடம் நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது.
மேலும் இளைய தலைமுறையினர் மற்றும் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்குமாறு மத்திய தேர்தல் குழுவிடம் சோனியா காந்தி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனால் நேற்று வெளியாக இருந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
இதையடுத்து மூத்த தலைவர்களின் பெயர் கொண்ட இன்று முதல் பட்டியல் வெளியாலாம் என்கிறார்கள். புதியவர்களின் பட்டியல் அடுத்த கட்டமாக வெளியாகலாம்.












Click it and Unblock the Notifications