இலங்கை பாதுகாப்பு வளையம்..உலகின் பயங்கரமான பகுதி

இலங்கையில் ராணுவ தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து ஐநா தலைமை செயலாளர் பான் கி மூன், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் நேரடியாக உரையாடினார். அப்போது அவரிடம் போர் முனையில் இருக்கும் 1.9 லட்சம் தமிழர்களின் உயிரை காக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
இந்நிலையில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு தலைவர் பிராட் ஆடம்ஸ் கூறுகையில்,
இலங்கை அரசு தொடர்ந்து பாதுகாப்பு பகுதிகளில் குண்டு வீசி வருகிறது. இலங்கை பாதுகாப்பு பகுதி என கூறிவரும் அப்பகுதி தான் உலகத்திலே மிகவும் ஆபத்தான பகுதியாக இருக்கிறது. இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக இங்கு பலியாகி வரும் மக்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது என்கிறார்.
பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளிலும் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. அங்கு உயிரோடு இருக்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், எனக்கு தெரிந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 120 பேர் பலியாகி இருக்கிறார்கள். 700 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர் என்றார்.
ஆனால், இவற்றை இலங்கை மீடியா அமைச்சர் அனுரா யாபா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் பாதுகாப்பு பகுதியில் குண்டு வீசவில்லை. நாங்கள் விடுதலை புலிகளிடம் இருந்து மக்களை மீட்க முயற்சித்து வருகிறோம் என்றார்.
உடனடியாக மீட்க வேண்டும்...
இந்நிலையில் இலங்கை அமெரிக்க தூதரகம் கூறுகையில்,
இலங்கை அரசுக்கு அதிக நிதி உதவி வழங்கி வரும் அமெரிக்கா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் தொலைபேசியில் கலந்து ஆலோசித்தனர். அப்போது இலங்கையில் ரத்தம் சிந்தாமல் எப்படி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது என்பது குறித்து பேசினர்.
போர் பகுதியில் சிக்கியிருக்கும் 1 லட்சம் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும். அங்கு இருக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். இலங்கை அரசு பாதுகாப்பு பகுதிகளை மதித்து செயல்பட வேண்டும்.
அங்கு ஏற்கனவே எக்கச்சக்கமான தமிழர்கள் பலியாகி உள்ளார்கள். இலங்கை அரசு அப்பகுதியி்ல் குண்டு வீசி இந்த எண்ணிக்கையை அதிகரிக்க செய்யக்கூடாது என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்கிறது அமெரிக்க தூதரகம்.
13 விடுதலை புலிகள் பலி...
இந்நிலையில் நந்திக்கல் பகுதியில் நடந்த சண்டையில் 13 விடுதலை புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ராணுவத்தின்ர ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications