வாணியம்பாடி ஸ்டைலில் வேலூரில் இந்து வேட்பாளரை நிறுத்திய ஜெ.

வாணியம்பாடி சட்டசபைத் தொகுதிக்கு முன்பு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வடிவேலுவை நிறுத்தினார் ஜெயலலிதா. அவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
வேலூர் தொகுதியில், இந்துக்கள் 68 சதவீதம் பேர் உள்ளனர். இதில் முதலியார் சமூகத்தவர் 25 சதவீதம் பேரும், வன்னியர்கள் 23 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதம் பேரும் உள்ளனர்.
முஸ்லீம்களின் வாக்கு சதவீதம் 32. எனவேதான் இந்தத் தொகுதியில் முஸ்லீம் வேட்பாளர்களே அதிகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால் அதிரடியாக வாசு என்ற இந்துவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா. இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாமக தங்கள் பக்கம் இருப்பதால், வன்னியர்கள் மற்றும் முதலியார் சமூக வாக்குகளை இழுத்து விடலாம் என்ற கணக்கின் அடிப்படையில்தான் வாசுவை போட்டுள்ளார் ஜெயலலிதா.
முன்பு வாணியம்பாடியில் 2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் வடிவேலு நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் பிரபல பாடகர் நாகூர் ஹனீபா போட்டியிட்டார். மற்ற கட்சிகளும் கூட முஸ்லீம் வேட்பாள்களையே நிறுத்தின.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், வடிவேலு வென்றார். அவருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்தார் ஜெ.
தற்போதும் வாணியம்பாடி ஸ்டைலில் வாசுவை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
48 வயதாகும் வாசு, பி.காம். பட்டம் பெற்றுள்ளார். வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர். டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு கீதா என்ற மனைவியும், பாக்கியா, தீபா, திவ்யா என்ற மகள்களும் உள்ளனர்.
வாணியம்பாடி வெற்றியை வேலூரில் ரிப்பீட் செய்வாரா வாசு என்பதைப் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications