அதிமுக: தலித்-முஸ்லீம் அதிருப்தி; மேலும் சில வேட்பாளர்கள் மாற்றம்?-நீலகிரியிலும் போட்டி!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. மனு தாக்கல் 24ம் தேதியோடு முடிவடையவுள்ளது.
இந் நிலையில் அதிமுகவில் திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
இந் நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தனி தொகுதிகளை மட்டுமே அதிமுக தன் வசம் வைத்துக் கொண்டு தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
நீலகிரி தனி தொகுதியை மதிமுகவிடமும், சிதம்பரம் தனி தொகுதியை பாமகவிடமும், நாகப்பட்டிணம் மற்றும் தென்காசி ஆகிய தனி தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமும் தந்துவிட்டது.
மேலும் கூட்டணியில் எந்த முஸ்லீம் கட்சியையும் சேர்க்காத நிலையில் 23 பேர் கொண்ட தனது வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இஸ்லாமியருக்கும் சீட் தரவில்லை.
இதனால் அந்த சமுதாயத்தினரின் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிற கட்சிகளுக்குப் போய்விடும் சூழல் நிலவுவதாக அதிமுகவினரே கூறுகின்றனர்.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியில், முஸ்லிம் வேட்பாளரையாவது நிறுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கூறப்பட்டுள்ளது.
அவரும் இது குறித்து பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்தத் தொகுதிகளில் சிலவற்றில் வேட்பாளர் மாற்றம் இருக்கலாம்.
அதே போல விழுப்புரம், திருச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்க்க வலுவான வேட்பாளரை நிறுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் வேட்பாளர் எஸ்.எஸ்.சந்திரன் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நீலகிரியை திரும்பப் பெறலாம்...
அதே போல நீலகிரி தொகுதியை அதிமுக எடுத்துக் கொண்டு மதிமுகவுக்கு வேறு தொகுதியை ஜெயலலிதா தரலாம் என்கிறார்கள்.
இந்தத் தொகுதியின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ராசாவை நாமே எதிர்கொள்ள வேண்டும் என அதிமுக கருதுவதாகத் தெரிகிறது.
இநத்த் தொகுதியை அதிமுக பெற்றால் அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதன்மூலம் தலித்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்ற குறையையும் போக்கலாம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது.
நீலகிரி தொகுதியை மதிமுக விருப்பமே இல்லாமல் தான் ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வாங்கிக் கொண்டு காஞ்சிபுரத்தைத் தந்தால் மகிழ்ச்சியோடு ஏற்போம் என்கிறது மதிமுக வட்டாரம்.