அழகிரி: டோக்கன் போட்டு பணம் பட்டுவாடா-சிபிஎம் புகார்
மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முக அழகிரிக்கு ஆரத்தி எடுக்கும் மக்களுக்கு டோக்கன் போட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் அதிக பரபரப்பாக பேசப்பட்டு வரும் தொகுதி மதுரை தொகுதி தான். இதற்கு திமுக தென்மாவட்ட அமைப்பாளர் முக அழகிரி அங்கு போட்டியிடுவது தான் காரணம். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணி சார்பில் சிபிஎம் கட்சியை சேர்ந்த மோகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து திமுகவினர் புகார் தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த அழகிரிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுத்ததாகவும், அழகிரி அந்த இடத்தை விட்டு சென்ற பின்னர் திமுகவினர் சிலர் மீண்டும் வந்து டோக்கனை வாங்கிகொண்டு ரூ. 100 கொடுத்ததாகவும் சிபிஎம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎம் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் அண்ணாதுரை கூறுகையில்,
மதுரை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முக அழகிரி சனிக்கிழமை மேலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
பிரசாரம் முடிந்து அழகிரி சென்றபின் அந்த டோக்கன்களுக்கு திமுகவினர் தலா ரூ.100 வழங்கி உள்ளனர். இது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு முரணானதாகும். இந்த விதிமீறலைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ரா.அண்ணாதுரை.












Click it and Unblock the Notifications