கள்ளக்குறிச்சி-ஆத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும்-பாமக
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி அதிமுக நகர அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், திருநாவலூர் எம்எல்ஏவுமான குமரகுரு தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளர் தன்ராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன், எம்எல்ஏக்கள் கலிவரதன், செந்தமிழ்செல்வன், நெடுஞ்செழியன், காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் வேட்பாளர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,
பெரிய மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் சேலத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூர் மாவட்டங்களை உருவாக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். கல்வி, சுகாதாரம், வருவாய்த்துறை ஆகியவற்றுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவேன்.
கள்ளக்குறிச்சி நகரின் வளர்ச்சிக்காக சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி இடையே ரெயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துவேன். மேலும் கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை வரை ரெயில் பாதையை நீட்டிக்க முயற்சி எடுப்பேன்.
கல்வராயன்மலையில் பயிர் செய்யப்படும் மரவள்ளி கிழங்கு மற்றும் கடுக்காய்களை கொண்டு அங்கு தொழிற்சாலை அமைத்து மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். மலைவாழ் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு சான்றிதழுடன் சேர்த்து சாதி சான்றிதழ் வழங்க பாடுபடுவேன்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 14ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மே 5ம் தேதியும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர் என்றார்.