பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் மாற்றம்-காரணம் 'திமுக'!
பெரம்பலூர்: திமுகவினருடன் மிக நெருக்கமாக இருப்பதாலும் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரிந்ததாலும் தான் பெரம்பலூர் அதிமுக வேட்பாளரை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாற்றியது தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் தொகுதியில் மருதைராஜ் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் நேற்று இவரைத் தூக்கிவிட்டு முன்னாள் அமைச்சரான கே.கே.பாலசுப்பிரமணியத்தை புதிய வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
இதற்கு மருதை ராஜ் குறித்து போயஸ் கார்டனில் குவிந்த புகார்களே காரணம் என்று தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் ஒன்றிய அதிமுக செயலாளரான மருதைராஜ் குறித்து அதிமுக தட்டிவிட்ட புகார்களில் முக்கியமானவை.
1. இவர் தொகுதியில் பொது மக்கள் யாருக்குமே அறிமுகமில்லாதவர். இங்கு திமுக சார்பில் நடிகர் நெப்போலியன் போட்டியிடும் நிலையில் அறிமுகமில்லாத நபரை வைத்துக் கொண்டு எப்படி வெல்வது?
2. அதிமுகவினருக்கே இவர் உதவியதில்லை
3. குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு மிக நெருங்கிய உறவினர் இவர். அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் திமுகவை வலுவாக எதிர்க்க மாட்டார்.
4. மத்திய அமைச்சர் ராசாவின் உதவியாளராக இருந்த ஒருவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதன்மூலம் இவருக்கு அரசு காண்ட்ராக்ட்களும் கிடைக்கின்றன. இவர் எப்படி திமுகவுக்கு எதிராக தீவிரமாக களமிறங்குவார்?.
இந்த புகார்கள் தெரிய வந்ததும் கடுப்பான ஜெயலலிதா இவரைப் பரிந்துரை செய்த கட்சியின் நிர்வாகிகளை லெப்ட்-ரைட் வாங்கிவிட்டு முன்னாள் அமைச்சரும், தொண்டர்களிடம் நன்றாகப் பழகுபவரும், மக்களிடம் ஓரளவுக்கு அறிமுகமானவரும், மிக அமைதியான சுபாவமும் கொண்டவரான பாலசுப்பிரமணியத்தை வேட்பாளராக அறிவித்தாராம்.
மருதை ராஜூடன் ஒப்பிடுகையில் பாலசுப்பிரமணியம் மிக நல்ல சாய்ஸ் என்கிறார்கள் பெரம்பலூர் அதிமுகவினர்.