வைகோ-டி.ஆர் மீது சட்டப்படி நடவடிக்கை: கமிஷனர்
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
வைகோ மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதே போல விஜய டி.ராஜேந்தர் பேசிய கருத்துக்கள் இறையாண்மையை மீறிவையா என சட்ட நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல இறையாண்மைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
580 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் 15 பேர் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள். மைலாப்பூரில் ஒரு லாட்ஜில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.