திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் மாற்றம்-பின்னணியில் மதம்?
இந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜனை மாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவருக்குப் பதிலாக இன்பராஜ் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
இந்தத் ஆதிதிராவிட சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜன் தலித் கிருஸ்துவர் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
தலித் கிறிஸ்தவர்கள் தனித் தொகுதிகளில் போட்டியிட இயலாத நிலை உள்ளது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அது தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதனாலேயே அவருக்குப் பதிலாக இன்பராஜை வேட்பாளராக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இன்பராஜும் கிருஸ்துவர்...?:
ஆனால், இதிலும் கூட சிக்கல் முளைத்துள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட இன்பராஜும் கூட கிருஸ்துவ மதத்துக்கு மாறியவர்தான் என்று அதிமுகவினரே போயஸ் கார்டனுக்கு பேக்ஸ்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
என்ன காரணத்துக்காக வேட்பாளர் மாற்றப்பட்டாரோ, அதே பின்னணி கொண்ட இன்னொருவரை எப்படி வேட்பாளராக அறிவித்தீர்கள் என்று அதில் கேட்டுள்ளனராம் இன்பராஜுக்கு ஆகாத அதிமுகவினர்.
இதனால் இவரது பெயரை பரிந்துரைத்த மாவட்ட நிர்வாகிகள் மீது கோபமடைந்துள்ள ஜெயலலிதா இது குறித்து விசாரிக்கச் சொல்லியுள்ளதாகவும் தகவல் வருகிறது.
ஆனாலும் தான் கிருஸ்துவர் அல்ல என்று இன்பராஜ் கூறுகிறாராம். இதையடுத்து அவரது பின்னணி குறித்து உளவுத் துறையினர் ஆராய ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், இவர் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்று அடித்துச் சொல்லும் திமுகவினர், இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதை வேட்பு மனு பரிசீலனையின்போது தேர்தல் ஆணையத்திடம் தந்து இவரது மனுவை நிராகரிக்க வைப்போம் என்கிறார்கள்.
மீண்டும் மாற்றம்?:
இதையடுத்து இன்பராஜை மாற்றிவிட்டு மீண்டும் ஒரு புதிய வேட்பாளரை அறிவிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.