தாய்லாந்தில் கலவரம்...ஆசியன் மாநாடு ஒத்திவைப்பு
பாங்காங்: தாய்லாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என அங்குள்ள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இன்று தொடங்குவதாக இருந்த இந்தியா மற்றும் ஆசியன் கூட்டமைப்பு மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆசியன் நாடுகள் கூட்டமைப்பு பங்கேற்கும் மாநாடு இன்று தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் துவங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்க இந்தியா சார்பில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜிவாவுக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர் தான் பங்கேற்கும் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
இதை தொடர்ந்து நேற்று அவர்கள் பட்டாயா நகரில் மாநாடு நடக்கவிருந்த இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த கண்ணாடிகள் சிலவற்றை அடித்து நொறுக்கினார். பாதுகாப்பு படையினரால் அவர்களை தடுக்க முடியவில்லை. கூட்டம் நடைபெறும் அறை வரை அந்த கலவரக் கும்பல் முன்னேறியது.
பின்னர் அவர்கள் கூட்டத்துக்கு வந்த தாய்லாந்து தலைவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் புடைசூழ தலைவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தாய்லாந்து பிரதமர் அபிஷித் மாநாடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாய்லாந்துக்கான இந்திய தூதர் லதா ரெட்டி கூறுகையில், இந்திய பிரதிநிதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications