சத்யம் ஏலம்-வென்றது டெக் மகிந்திரா

நிறுவனத்தின் 31 சதவீகித பங்குகளுக்கான ஏலம் இன்று தொடங்கியது. அதிகபட்ச ஏலத் தொகையை குறிப்பிட்டுள்ள நிறுவனமான டெக் மகிந்திரா இதில் வென்றது.
ஒரு பங்குக்கு ரூ. 58 தர டெக் மகிந்திரா முன் வந்துள்ளது. ஒரு பங்குக்கு ரூ. 49.50 தர முன் வந்த லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ஏலத்தில் தோற்றது.
ஏற்கெனவே சத்யம் நிறுவனத்தில் 12 சதவீகித பங்கு முதலீட்டைக் கொண்டுள்ளது லார்சன் அண்ட் டூப்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கம்பெனி லா போர்ட் கூறுகையில், சத்யத்தின் 31 சதவீத பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.58 என்ற விலையில் வாங்கிக் கொள்ள முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா, அதற்கான விண்ணப்பத்தை வரும் வியாழக்கிழமைக்குள் எங்களிடம் அளிக்க வேண்டும். அதற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து சத்யம் நிர்வாகக் குழுவின் பரிந்துரைப்படி 51 சதவீத பங்குகளையும் டெக் மகிந்திராவுக்கு விற்க கம்பெனி லா போர்ட் அனுமதிக்கும் என்று தெரிகிறது.
கம்ப்யூட்டர் துறையில் சர்வதேச அளவில் உச்சத்திலிருந்த நிறுவனங்களில் ஒன்றான சத்யம், அதன் நிறுவனர் மற்றும் தலைவரான ராமலிங்க ராஜூவின் பல ஆயிரம் கோடி மோசடியால் ஒரே நாளில் அதல பாதாளத்தில் விழுந்தது.
அதன் பிறகு அரசு ஒரு இயக்குநர் குழுவை நியமித்து, நிறுவனத்தை காப்பாற்ற முனைந்தது. இருந்தாலும் இன்னும் பெரும் தடுமாற்றத்தில் உள்ளது சத்யம். ஊழியர்கள், சம்பளம், நிர்வாகச் செலவுகள் போன்றவற்றைக் கூட சமாளிக்க முடியாத நிதிநெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போதும் சத்யம் நிறுவனம் 70 நாடுகளில் இயங்கி வருகிறது. 500க்கும் மேற்பட்ட க்ளையண்டுகள் உள்ளனர் இந்நிறுவனத்துக்கு. ஆனால் நிதிநிலை குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்காததால், சத்யம் நிறுவனத்தை வாங்க முன்வந்த பல நிறுவனங்கள் விலகிவிட்டன.
ஆனால், ஏலத்தில் நம்பகத் தன்மை இல்லை என்று ஸ்பைஸ் நிறுவனம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டி விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
இப்போது சத்யத்தின் 31 சதவீத பங்குகளை டெக் மகிந்திரா ரூ. 1,757 கோடிக்கு வாங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications