போர் நிறுத்தத்திற்கு முன் வெறித் தாக்குதல்-294 பேர் படுகொலை
வன்னி: வன்னியில் 48 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வரவுள்ள நிலையில் இலங்கைப் படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 432 பேர் படுகாயமடைந்தனர்.மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் நேற்று அதிகாலை 3.15 மணி முதல் பகல் முழுவதும் இலங்கைப் படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர்.
இவை அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய மக்கள் வாழ்விடங்கள் மீது வீழ்ந்து வெடித்தன.
வட்டுவாய்க்கால், மந்துவில் ஆகிய பகுதிகளில் இருந்தும் மக்கள் வாழ்விடங்களான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் பகுதிகள் நோக்கியும் சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர்.
மாலை 4 மணிவரை நடைபெற்ற தாக்குதல்களில் 294 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே வன்னிப் பகுதியில் புயல் சின்னம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பதுங்கு குழிகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அதற்குள்ளும் போய் மக்கள் பதுங்க முடியாத அவல நிலை.
சிகிச்சைக்காக மாத்தளன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் மக்கள் மீதும் இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்து கொண்டு வரப்பட்ட 6 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பு வலயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து எறிகணை, பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் எம்ஐ-24 போர் விமானங்கள் மூலம் இலங்கைப் படைகள் தாக்கி வருகின்றன.
ஒரு பக்கம் கன மழை மறுபக்கம் குண்டு மழை என உலகில் எந்த இனமும் இப்படி ஒரு அவல நிலையை சந்தித்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு தமிழர்கள் திக்கு திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
மாத்தளன் மருத்துவமனை பகுதியில் பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது. விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளிகள் மழையில் நனைந்தபடி உள்ளனர்.
தொடர்ச்சியான மழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்த அவகாசம் போதாது-ஐநா:
இந் நிலையில் இலங்கை போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2 நாள் போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு முன் வந்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் 2 நாள் போர் நிறுத்தம் போதாது. இதை நீட்டிக்க வேண்டும்.
எனினும் போர் நிறுத்தம் ஒரு முன்னேற்றபடியாக அமையும். தற்போதைய நிலையில் அவசர தேவையை பூர்த்தி செய்வதாக இது இருக்கும்.
தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் விடுதலைபுலிகள் இதனை மதித்து பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் பகுதியில் இருந்து வெளியேற விரும்பும் மக்களுக்கு எந்தவித தடையும் இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.
முன்னதாக 3 நாள் போர் நிறுத்தம் என்று செய்திகள் வந்தன. பின்னர் அது இரண்டு நாளாக சுருங்கிவிட்டது.