மனைவி தலையை காதலன் வீட்டில் வீசிய கணவன்
உடுமலை: உடுமலை அருகே மனைவியின் ஆசைப்படி அவரது தலையை அறுத்து கள்ளக் காதலுக்கு துணை போனவரின் வீட்டு முன்பு வீசிய கொடூர கணவனை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உடுமலை அருகே உள்ள மடக்குளம் என்ற கிராமத்தில் பால்வியாபாரம் செய்து வருபவர் சிவசாமி. நேற்று காலை இவரது வீட்டுக்கு பைக்கில் வந்த ஒருவர் ஒரு இளம் பெண்ணின் தலையை அவரது வீட்டு வாசலில் எறிந்துவிட்டு தப்பியோட முயன்றார்.
அப்போது அதை பார்த்த சிவசாமியின் மனைவி சத்தம் போட்டதை அடுத்து அருகிலிருந்தவர்கள் பைக்கில் வந்த மர்ம நபரை விரட்டி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த நபர் அளித்த வாக்குமூலம்,
என் பெயர் செந்தில்குமார் (27). திண்டுக்கல் அருகே குமாரபாளையம் சொந்த ஊர். கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். எனக்கும், அக்கா மகள் ராதாவுக்கும் (22), ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எங்களுக்கு மூன்று வயதில் ஹரிஹரன் என்ற மகன் இருக்கிறான்.
திருமணத்துக்கு முன் ராதா கணியூரில் உள்ள டுடோரியலில் படித்து வந்தார். அவருடன், கழுகரையைச் சேர்ந்த சிவசாமியின் பெண்ணும் படித்தார். இதனால், தோழியின் வீடு உள்ள கழுகரைக்கு, திருமணத்திற்குப் பின்னும் அடிக்கடி போய் வந்தார் ராதா.
அப்போது, மடத்துக்குளத்தில் கடை வைத்துள்ள விவேக் என்பவரை தோழியின் வீட்டில் வைத்து சந்தித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையி்ல் காதல் தொற்றி கொண்டது. இருவரும் தோழியின் வீட்டில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாள் எனக்கு அவர்களது கள்ளத்தொடர்பு தெரியவர அதிர்ச்சியடைந்தேன். ஆனால், எனக்கு என் மனைவி மீது கோபம் வரவில்லை. அவரை சமாதானப்படுத்தினேன்.
ஆனால், ராதா உங்களுடன் என்னால் இனிமேல் வாழ முடியாது. விவேக் உடன் சேர்த்து வையுங்கள் எனறார். சரியென்று விவேக்குடன் பேசினேன். ஆனால், அவர் இவளை மணந்து கொள்ள மறுத்துவிட்டார்.
அவரது தோழி வீட்டுக்கும் சென்று பேசினேன். தீர்வு கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இது குறித்து நானும், என் மனைவியும் பேசினோம். அப்போது ராதா என்னிடம்,
இனி என்னால் வாழ முடியாது, உங்களை நான் ஏமாற்றி விட்டேன் மாமா. எனது வாழ்க்கையை நானே தொலைத்து விட்டேன் என அழுது புலம்பினார். மேலும் இறப்பதை தவிர வேறு வழில்லை. எனது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் படி தாண்டிய என் தலையை அறுத்து, நான் வாழ்க்கையை தொலைத்த வீட்டில் வீச வேண்டும் என கூறினார்.
ராதாவின் பேச்சை தட்ட முடியாமல் நேற்று காலை எங்கள் வீட்டின் தலைவாசலில் வைத்து அவரது தலையை அரிவாளால் அறுத்து, பையில் போட்டுக் கொண்டு, 6 கிமீ தூரம் பைக்கில் கழுகரைக்கு வந்தேன். பின்னர் ராதாவின் தோழி வீட்டில் அதை போட்டேன் என்றார்.
செந்தில்குமார் கூறுவதில் உண்மை உள்ளதா அல்லது அவர் தன் மீது போலீசார் இரக்கம் காட்ட பொய் சொல்கிறாரா என்பது குறித்து விசாரி்த்து வருகின்றனர்.