பொய்யால் சீட் இழந்த விழுப்புரம் அதிமுக வேட்பாளர்

சமீபத்தில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜனை மாற்றி இன்பராஜை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
ராஜன் மாற்றப்பட்டதற்குக் காரணம் அவர் தலித் கிறிஸ்தவர் என்பதால். திருவள்ளூர் தனி தொகுதி என்பதால் அங்கு இந்து தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
ஆனால் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இன்பராஜும் ஒரு தலித் கிறிஸ்தவர் என்று பின்னர் தெரிய வந்ததால் அவரையும் மாற்றி விட்டு இப்போது டாக்டர் வேணுகோபால் வேட்பாளராகியுள்ளார்.
இந்த நிலையில் விழுப்புரம் தனி தொகுதி வேட்பாளரான முருகனையும் நேற்று மாற்றி முன்னாள் அமைச்சர் ஆனந்தனை வேட்பாளராக்கினார் ஜெயலலிதா.
முருகன் நீ்க்கப்பட்டதற்கு அவர் சொன்ன சில பொய்களும், அவர் மீது உள்ள பல குற்றச்சாட்டுக்கள், வழக்குகளுமே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
முருகனுக்கு தமிழகத்திலும், புதுவையிலும் என இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதாம். இதை கட்சியில் தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.
அதிமுகவில் இருந்து கொண்டே புதுச்சேரி மாநிலம் ஊசுடு சட்டசபைத் தொகுதியில், அவர் கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 192 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதையும் சொல்லாமல் மறைத்து விட்டார்.
இதை விட ஜெயலலிதாவை பெரும் டென்ஷனாக்கியது, 1983ம் ஆண்டிலிருந்தே தான் அதிமுகவில் இருப்பதாக முருகன் கூறியதுதான்.
அதை விட ஜெயலலிதாவை மேலும் டென்ஷனாக்கிய பொய் என்னவென்றால்- அதிமுக பிளவுபட்டபோது நான் உங்களது தலைமையிலான அணியில் இருந்தேன் என்று முருகன் கூறியதுதான்.
இந்தப் பொய்களையெல்லாம் சென்னையில் நடந்த நேர்காணலின்போது முருகனே நேரடியாக ஜெயலலிதாவிடம் கூறியவை. இதனால்தான் கடுப்பாகி முருகனை தூக்கி விட்டார் ஜெயலலிதா.
இதுதவிர முருகன் மீது ஏகப்பட்ட வழக்குகளும் இருக்கிறதாம். எல்லாமாக சேர்ந்து அவரது சீட்டுக்கு 'கோவிந்தா' போட்டு விட்டன.












Click it and Unblock the Notifications