மீண்டும் 11,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்!
மும்பை: முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வாங்கும் ஆர்வம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இன்றும் ஏறுமுகத்தில் இருந்தது.
கிட்டத்தட்ட 200 நாட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த சென்செக்ஸ் ஒரு வழியாக இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 89 புள்ளிகளுக்கும் மேல் இழந்த சென்செக்ஸ், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் களை கட்டியது.
டாடா மோட்டார்ஸ், ரான்பாக்ஸி லாபரட்டரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பிஎச்இஎல், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
பிற்பகல் 12 மணிக்குப் பிறகு சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. இந்த ஓராண்டில் பெரும்பாலும் வீழ்ச்சிகளை மட்டுமே பார்த்து வந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது இந்த போக்கு.
குறிப்பாக மிட்கேப் பிரிவில் லங்கோ இன்ப்ரா, டெக்கன் க்ரானிக்கிள், குஜராத் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பொரேஷன், நிர்மா, பஞ்சாப் லாயிட் போன்றவற்றின் பங்கள் பெரும் லாபத்தில் விற்பனையாகின.
இன்றைய வர்த்தகத்தில் நஷ்டம் கண்ட பங்குகள்:
இன்போஸிஸ் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி வங்கி மற்றும் விப்ரோ.
ஸ்மால் கேப் பிரிவில் சிஎம்சி லிட் 37 சதவிகித லாபத்தில் கைமாறியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று நல்ல ஏற்றம். 101 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது இன்று.
வர்த்தக நேர முடிவில் குறியீட்டெண் நிலைகள்: சென்செக்ஸ்- 11284.73 (317.51), நிப்டி- 3484.15 (101.55)