அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை-சோனியா தாக்கு

கர்நாடக மாநிலம் பீதர் நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரசாரம் செய்தார்.
அப்போது அத்வானியை அவர் கடுமையாக சாடினார். சோனியா காந்தியின் உத்தரவு இல்லாமல் மன்மோகன் சிங் எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என அத்வானி கூறியதற்குப் பதிலடியாக அவரது பதில் இருந்தது.
சோனியா காந்தி பேசுகையில், எல்.கே.அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை. ஆர்.எஸ்.எஸ் குறித்த சிந்தனை இல்லாமல் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது.
உண்மையில் அத்வானிதான் அடிமை ஆவார். கட்சியில் தனது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பயந்தாக வேண்டியுள்ளது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வொரு விருப்பத்தையும் அவர் நிறைவேற்ற விழைகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமானவர் என்று அத்வானி கூறி வருவது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை பொருட்படுத்தவே தேவையில்லை. உருப்படாத பேச்சு அது.
இப்படிக் கூறும் அத்வானியால், ஆர்.எஸ்.எஸ். பயம் இல்லாமல் ஏதாவது ஒரு முடிவையாவது எடுக்க முடியுமா..
அத்வானி பாஜக தலைவராக இருந்தபோது பாகிஸ்தானுக்குச் சென்று ஜின்னாவுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டு வந்தார். ஆனால் இங்கு வந்ததும், ஆர்.எஸ்.எஸ். எழுப்பிய போர்க்குரலைத் தொடர்ந்து தனது கருத்திலிருந்து பின் வாங்கினார். அவரது கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
பிரதமர் என்பவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவரல்ல. மாறாக, நாட்டுக்கே சொந்தமானவர். அவரை அவமானப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்படுத்துவது போலாகும். இதை அத்வானி நினைவில் கொள்ள வேண்டும்.
யார் பலவீனமானவர்கள், அத்வானியா, மன்மோகன் சிங்கா என்பதை மக்கள் தீர்மானிக்கும் நேரம் வந்து விட்டது. அவர்கள் சரியாக தீர்மானிப்பார்கள் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications