தமிழகம்- 10% வாக்குச் சாவடிகள் பதட்டமானவை
கோவை: தமிழகத்தில் உள்ள 53 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 10 சதவீதம் பதட்டமானவை என்று டிஜிபி ஜெயின் கூறியுள்ளார்.
இங்கு எந்தவிதமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க போலீஸார் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் மற்றும் மத, ஜாதி ரீதியில் பதட்டமானவையாக கருதப்படும் இந்த வாக்குச் சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
மேலும், இங்கிருந்து வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார், 21 ஆயிரம் சீருடைப் பாதுகாவலர்கள் (முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், வன பாதுகாப்பு அதிகாரிகள், முன்னாள் போலீஸார்), 94 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேபோல தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அங்குள்ள போலீஸார் தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்படுவர்.
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் முன்பு நக்சலைட்டுகள் நடமாட்டம் இருந்தது. ஆனால் தற்போது அப்படி எதுவும் இல்லை. இருப்பினும் நக்சலைட்டுகளால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் அதிரடிப்படையினர் மற்றும் சிறப்பு போலீஸ் படையினர் தீவிர கண்காணிப்பி்ல் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார் ஜெயின்.