வி.சி. விழுப்புரம் வேட்பாளர் நீதிபதி சாமிதுரை
விழுப்புரத்தில் தொழிலதிபர் மடிப்பாக்கம் வேலாயுதம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெரும் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மடிப்பாக்கம் வேலாயுதத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் உத்தரவிட்டது.
இதையடுத்து வேலாயுதம் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வேலாயுதத்திற்குப் பதில் ஓய்வு பெற்ற நீதிபதி சாமிதுரை போட்டியிடுவார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையை அடுத்துள்ள பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி சாமிதுரை. மனைவி பெயர் டாக்டர் நித்யகல்யாணி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார் நீதிபதி சாமிதுரை.
பி.எஸ்.சி, பி.எல், படித்துள்ள நீதிபதி சாமிதுரை, 1955 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1990 முதல் 94 வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
1997 முதல் 2001 வரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.
திமுக அறிவித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் சாமிதுரையும் ஒருவராக இடம் பெற்றார்.
இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மூத்த மகள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். இன்னொரு மகன் என்ஜீனியராகவும், கடைசி மகள் டாக்டராகவும் உள்ளனர்.