விருதுநகர்-தேனி காங் வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டம்-அரை கம்பத்தில் கட்சி கொடி
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சுந்தரவடிவேல் அறிவிக்கப்பட்டார். இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளராவார்.
அதே போல தேனி தொகுதி வேட்பாளராக ஆரூண் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தங்கபாலுவால் வாய்ப்பிழந்த கணேசன்:
விருதுநகரைப் பொறுத்தவரை சீட் பிடிக்க அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் தீவிரமாக முயன்று வந்தார். ஆனால் அவருக்குப் பதிலாக சுந்தர வடிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கணேசன் தரப்பு ஏமாற்றம் அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளது.
அரை கம்பத்தில் கட்சிக் கொடி:
சிவகாசியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய கணேசன் கோஷ்டியினர் அங்கிருந்த கட்சியின் பெயர் பலகையை அகற்றினர். பின்னர் அங்குள்ள கொடி கம்பத்தில் இருந்த கட்சியின் கொடியை இறக்கி அகற்றினர்.
இதையடுத்து காமராஜர் சிலை அருகில் இருந்த கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காங்கிரஸ் கொடியை இறக்கி அதை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர்.
பி்ன்னர் தங்கபாலுவுக்கு எதிராக கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம்:
இந் நிலையில் இன்று காமராஜர் சிலை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் 100 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரூணுக்கும் எதி்ர்ப்பு:
அதே போல தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளர் ஆரூணுக்கு எதிராகவும் போராட்டம் வெடித்துள்ளது.
பெரியகுளம் தொகுதி எம்பியான ஆருணுக்கு இம்முறை தொகுதி சீரமைப்பில் பெரியகுளம் தொகுதி இல்லாமல் போனதால் தேனி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆரூணின் ஆதரவாளர்கள் தேனி, கம்பம், போடி உள்பட பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
குலாம் நபி கொடும்பாவி எரிப்பு:
ஆனால், ஆரூண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு கோஷ்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆரூணுக்கு சீட் வழங்கியதை கண்டித்து தேனி-பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகே தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தின் கொடும்பாவியை காங்கிரசார் எரித்தனர்.
முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் டெல்லியில் பயங்க கோஷ்டி மோதல் நடந்தது.
அமைச்சர் பிரிதிவிராஜ் செளஹான் வீட்டில் இரவு முழவதும் நடந்த கூட்டத்தில் அகமத் படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் இடையே வாக்குவாதமும் நடந்தது.
ஒருவழியாக பட்டியல் தயாரிக்கப்பட்டாலும் காஞ்சிபுரம் தொகுதிக்கு கடும் போட்டி நிலவுவதால் வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை. இந்த சீட்டைப் பிடிக்க ராணி, நிர்மலா, விஸ்வநாதன் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர்.
காஞ். காங் வேட்பாளர்? இன்று தெரியும்:
இந் நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் இன்று அறிவிக்கும் என காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளரை கட்சி மேலிடம் முடிவு செய்து இன்று அறிவிக்கும்.
தேனி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து அந்தந்த மாவட்ட தலைவர்களுடன் பேசி வருகிறேன். இனி யாரும் வேட்பாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
அனைத்து வேட்பாளர்களும் சோனியா அறிவித்த வேட்பாளர்கள். எனவே வேட்பாளர்களுக்கு எதிராக யாரும் செயல்படக்கூடாது. அத்துடன் கூட்டணி வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கூட்டணிக்கு எதிராக யாரும் செயல்படக்கூடாது. மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.