எஸ்.எஸ்.சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மத்திய சென்னை வேட்பாளராக அதிமுக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து எஸ்.எஸ்.சந்திரன் நிறுத்தப்பட்டார். ஆனால், மாறனை எதிர்க்கும் வலு சந்திரனுக்கு இல்லை என்ற பேச்சு எழுந்தது.
இந் நிலையில் நேற்று முன் காலை தான் எஸ்.எஸ்.சந்திரன் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். பல்வேறு இடங்களுக்கும் சென்று அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் போய் உட்கார்ந்தார்.
அப்போது அவருக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது.
போய்விட்டு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து பிரச்சாரத்தைத் தொடர்வோம் என்று கூறிவிட்டுச் சென்றவர் வரவேயில்லை. இதனால் அவர் வருவார் என்று காத்திருந்த தொண்டர்கள் எரிச்சலடைந்த நிலையில் போயஸ் கார்டனில் இருந்து எஸ.எஸ். சந்திரன் 'நெஞ்சு வலி' காரணமாக மாற்றப்பட்டதாக தகவல் வந்தது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதனால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு பதிலாக எஸ்.எம்.கே.முகமதுஅலி ஜின்னா வேட்பாளராக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications