ஈழம்-நெல்லையில் காங்கிரசுக்கு எதிராக தமிழர்களம் துண்டு பிரசுரம்
நெல்லை: இலங்கை பிரச்சினையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை கண்டித்து நெல்லை முழுவதும் தமிழர்களம் என்ற அமைப்பு அக்கட்சிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறது.
இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வந்து அப்பாவி தமிழர்களை காக்க வேண்டும் என தமிழர்கள் உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாள் போர் நிறுத்தத்திற்கு பிறகு ராஜபாக்சே அரசு தமிழர்கள் மீது மீண்டும் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டினால் திருப்தியடையாத தமிழர்களம் என்ற அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நெல்லையில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து வருகிறது.
அதில்,
இரத்தச் சகதியில் செத்து மடியது எங்கள் இனம்...
சிங்களனுக்கு ஆயுதம், ஆட்கள் பயிற்சி, பணம்
கருவிகள் அள்ளிக் கொடுத்த காங்கிரசுக்கு
எங்கள் வாக்கு இனி இல்லை...
என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள், பொதுமக்களிடமும் நாள்தோறும் இந்த அமைப்பினர் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருவதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.