அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின்
சென்னை: டாக்டர் ராமதாஸுக்கு துணிச்சல், தைரியம் இருந்தால், தனது மகன் அன்புணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி ஆக்கட்டும் பார்க்கலாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காயத்ரி ஸ்ரீதரனை ஆதரித்து பூந்தமல்லியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி திமுக கூட்டணிக்கு கிடைத்தது. அதேபோன்ற மாபெரும் வெற்றியை இம்முறையும் திமுக கூட்டணிக்கு நீங்கள் வழங்கி ஆதரவு தரவேண்டும்.
சென்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்' என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்தோம்.
இப்போது, 'சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாததையும் செய்வோம்" என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசும், இரண்டரை ஆண்டு காலத்தில் திமுக அரசும் வியத்தகு சாதனைகளை செய்திருக்கின்றன. இப்படி சாதனைகள் செய்ததால்தான் திமுக கூட்டணி, தேர்தலை தைரியமாக சந்திக்கிறது.
பாமக தலைவர் ராமதாஸ், ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது தனது மகன் அன்புமணிக்கு மேல்சபை எம்பி சீட் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி வைக்கிறார்.
ராமதாசுக்கு தைரியம் இருந்தால், அவரது மகனை தேர்தலில் நிறுத்தி மக்களின் ஆதரவை பெற்று எம்பியாக்கட்டும். கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். இப்படிப்பட்ட ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்.
தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சரவையில் கடைசி வரை இருக்க செய்து, இப்போது மாற்று கட்சியுடன் கூட்டணி அமைத்து கொண்டு திமுக கூட்டணியை விமர்சிப்பது என்ன நியாயம்?
சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். இதற்கு ராமதாசும், வைகோவும் ஆதரவு தெரிவிக்கிறார்களா? இப்படி அறிக்கைவிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து கேட்பதற்கு முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சாடினார் ஸ்டாலின்.