மகாராஷ்டிர ஆளுனர் மாளிகையை குறி வைத்த கஸாப்
மும்பை: கஸாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஆளுனர் மாளிகை தகர்க்க திட்டமிட்டு இருந்ததாக அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது மும்பை ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு இஸ்மாயில் கான் என்பவனும், கஸாப்பும் மும்பை ஆளுனர் மாளிகை இருக்கும் மலபார் ஹில்ஸ் பகுதிக்குத் தாக்குதல் நடத்தச் சென்ற போது, போலீசாரிடம் சிக்கினர்.
அப்போது போலீசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் இஸ்மாயில் கான் கொல்லப்பட்டான். கஸாப் உயிருடன் பிடிபட்டான்.
குற்றம் சாட்டப்பட்ட 47 பேரில், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளும் அடங்குவர். இதில் அஜ்மல் கஸாப், பாகிம் அன்சாரி மற்றும் சகாபுதீன் அகமது ஆகிய மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 35 பேர் தேடப்படும் குற்றவாளிகள்.
இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் வசித்து வருகிறார்கள் அரசு சிறப்பு வக்கீல் உஜ்வல் நிகாம் நேற்று சிறப்புக் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தீவிரவாதிகள் பயன்படுத்திய 4 மொபைல் போன் மற்றும் அவர்களது உரையாடலின் ஒலிப்பதிவு ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
அவர்கள் மீது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், சதி, ஆயுதங்கள், வெடிபொருட்களை சேகரித்தது, இந்தியர்களின் உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துதல், காஷ்மீரை கைப்பற்றுதல், வெளிநாட்டினரை கொலை செய்தல், கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட மொத்தம் 312 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பின்னர் அரசு சிறப்பு வக்கீல் உஜ்வல் நிகாம் கூறுகையில்,
சபாவுதீனை நேபாளத்தில் சந்தித்து, இந்திய நகரங்கள் குறித்த வரைபடங்களை பாகிம் அன்சாரி ஒப்படைத்துள்ளார். இந்த வரைபடம் தான் மும்பை தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது. இதை வைத்து ஜகீர் ரகுமான் லக்வியின் வரைபடங்களில் உள்ள இடங்களை தாக்கும்படி தீவிரவாத குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் முடிந்தவுடன் வரைபடங்களை அழித்து விட வேண்டும் என தீவிரவாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இறந்து போன தீவிரவாதி அபு இஸ்மாயில் வரைபடத்தை அழிக்கும் முன்பு இறந்துவிட்டான். இது போலீசாரை கைப்பற்றினர்.
அதில் கடற்கரை பகுதி, மலபார் ஹில் மற்றும் ஆளுனர் மாளிகை ஆகிய இடங்கள் இடம் பெற்றிருந்தன. மலபார் ஹில்லில் எந்த இடத்தை தாக்க வேண்டும் என்பது அபு இஸ்மாயிலுக்கு மட்டுமே தெரிந்துள்ளது. அந்த இடத்துக்கு சென்றதும் இதுபற்றி சொல்வதாக கஸாப்பிடம் அவன் கூறி இருக்கிறான்.
இதற்காக கஸாப்பும், அபு இஸ்மாயிலும் ஒரு காரை பறித்துக்கொண்டு வேகமாக சென்றபோது, கடற்கரையில் அவர்களை போலீஸ் படை மடக்கி தாக்கியது. இதில் அபு இஸ்மாயில் கொல்லப்பட்டான். கஸாப் உயிருடன் பிடிபட்டான்.
இஸ்மாயிலிடம் இருந்து கைப்பற்றிய வரைபடத்தில் ஆளுனர் மாளிகை பிரதானமாக குறிக்கப்பட்டு இருந்தது. இது தீவிரவாதிகள் முக்கிய இலக்காக ஆளுனர் மாளிகை இருந்துள்ளது என்பதையே காட்டுகிறது என்றார் அரசு வக்கீல் உஜ்வால் நிகம் கூறினார்.
ஒன்றுமே புரியவில்லை...
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சமயங்களில் தனக்கு ஆங்கிலம் புரிகிறது. எனவே விசாரணையை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும் என கூறிய கஸாப் நேற்று தனக்கு பாகிஸ்தான், கஸாப் என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும் புரிவதாகவும், வேறு ஒன்றும் தனக்கு புரியவில்லை என்றும் கூறினான்.












Click it and Unblock the Notifications