திருச்சியில் கோஷ்டி மோதலால் திணறும் திமுக-கதறும் காங்கிரஸ்
திருச்சி: திருச்சி வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் இந்த கோஷ்டி மோதலால் கூட்டணி கட்சியான திமுகவும் தங்களது கூட்டணி வெற்றி பறிபோய்விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் எனக்கு, உனக்கு என போட்டி கொண்டு சீட் கேட்டு மேலிடத்தை வாட்டி எடுத்துவிட்டனர்.
தற்போதைய திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், அடைக்கலராஜ், ஜெரோம் ஆரோக்யராஜ் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு சீட் வேண்டும் என விடாபிடியாக இருந்ததால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிக்க தாமதம் ஆனது.
காங்கிரஸ் மேலிடமும் ஒரு வழியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சாருபாலா தொண்டைமானை வேட்பாளராக அறிவித்தது. இதற்கு திருச்சி காங்கிரஸ் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெண் காங்கிரஸ் உறுப்பினர் தீக்குளிக்கும் முயற்சியில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். சில இடங்களில் மாணவர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
திருச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஒரு சார்பினர் வற்புறுத்தி வருகின்றனர்.
தேர்தல் முடிவை பார்த்துவிட்டு அவர் பதவி விலக நினைக்கிறார். ஒரு வேளை தோற்றுவிட்டால் மேயர் பதவியில் ஒட்டிக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார் என எதிர் கோஷ்டியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட வருத்தத்தில் இருந்த திமுகவினர் அதை மறந்து அமைச்சர் நேருவின் வேண்டுகோளுக்கு இணங்கி தொகுதியில் விறுவிறுவென பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமை இல்லாமல் இப்படி தினமும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது திமுகவினரையும் சோர்வடைய செய்து வருகிறது.
காங்கிரசின் உட்கட்சி மோதலால் தங்களது உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆனால், அமைச்சர் நேரு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவார் திருச்சியில் தங்களது கூட்டணி வெற்றி பெறும் என திமுகவினர் கருதுகின்றனர்.