25 வருடத்துக்கு முன் இருந்த அதே ரோடு-விஜயகாந்த்
ஈரோடு: திமுக, அதிமுக கட்சித் தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தேமுதிகவைப் போல் தனித்து போட்டியிட தயாரா என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
விஜயகாந்த் ஈரோடு மாவட்டத்தின் பல இடங்களில் தேமுதிக வேட்பாளரை முத்து வெங்கடேஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஊட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு பைக்கில் வந்தேன். பின்னர் அங்கிருந்து தெங்குமரஹடா சென்றேன். அப்போது அந்த ரோடு எப்படி இருந்ததோ இப்போதும் அப்படியே தான் உள்ளது.
விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு புறக்கணித்து வருகின்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ரயில்பாதை இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நதிகள் இணைக்கப்படவில்லை. இதை இணைப்பதாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் சொல்லுகின்றன. ஆனால் இதுவரை செய்யவில்லை.
கொள்ளையடித்தது போதாதா...
திமுக தலைவர் கருணாநிதி நாற்பதும் வேண்டும் என்கிறார். இதுவரை கொள்ளையடித்தது போதாதா ? இன்னும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டுமா?
ஜெயலலிதாவிற்கு உள்ள கோடநாடு எஸ்டேட் போல் தனக்கும் எஸ்டேட் வேண்டும். அதை வாங்கவே ஒரு லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த ராசாவை பெரம்பலுரில் இருந்து நீலகிரிக்கு மாற்றி போட்டியிட வைத்துள்ளார்.
சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் பாலைவனமாக உள்ள தமிழகம் சோலைவனமாகும் என கருணாநிதி கூறியுள்ளார். அப்படியெனில் தற்போது தமிழகம் பாலைவனமாக உள்ளதை அவரே ஒப்புக் கொள்கிறார். அதிமுக, திமுகவுக்கு தைரியம் இருந்தால் எங்களை போல் தனித்து போட்டியிடட்டும்.
எனக்கு சம்பாதிக்கும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தால் நான் எவ்வளவோ சம்பாதித்திருப்பேன். இந்த தேர்தலிலே கூட என்னிடம் பேரம் பேச வந்த அரசியல் கட்சிகளிடம் பல கோடி வாங்கிருப்பேன். ஆனால் தமிழக மக்கள் வளமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications