நடிகர் ஜீதேந்திரா மீது செருப்பு வீச்சு - அடிபடவில்லை

லேட்டஸ்டாக செருப்பு வீசப்பட்டவர்கள் வரிசையில் இந்தி நடிகர் ஜீதேந்திரா இணைந்துள்ளார்.
ஜார்ஜ் புஷ் மீது முதன் முதலில் ஷூ வீசப்பட்டது. இதையடுத்து சீன பிரதமர், இந்தியாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அத்வானி, காங்கிரஸ் எம்.பிக்கள் நவீன் ஜிந்தால், அன்வர் உசேன் என இது தொடர் கதையாகியுள்ளது.
இந் நிலையில் இந்தி நடிகர் ஜீதேந்திர மீதும் செருப்பு வீசப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்ராவ் கவிட்டை ஆதரித்து ஜீதேந்திரா பேசினார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு செருப்பு ஜீதேந்திராவை நோக்கி பறந்து வந்தது.
அது ஜீதேந்திரா மீது படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 3000 பேர் அங்கு கூடியிருந்தனர். அந்தக் கும்பலிலிருந்து செருப்பு பறந்து வந்தது.
செருப்பை வீசியவர் பெயர் திலீப் இங்க்ளே. அவரை காங்கிரஸ் தொண்டர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக அடித்தனர். பின்னர் அவரை போலீஸார் வசம் ஒப்படைத்தனர். திலீப் இங்க்ளே எதற்காக செருப்பை வீசினார் என்ற காரணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications