போர் நிறுத்தம் கோரி நாளை பொது வேலைநிறுத்தம்: கருணாநிதி
சென்னை: இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இதை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி நாளை தமிழகத்தில் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு 2 முறை தந்தி அடித்தார் முதல்வர் கருணாநிதி.
இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன்.