இரவில் கொள்ளையன்..பகலில் வள்ளல்-13 ஆண்டுக்கு பின் கைது
சென்னை: திருட்டு தொழில் செய்து கோடீஸ்வரனான கில்லாடி திருடனை போலீசார் கைது செய்தனர். கடந்த 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அவனிடம் இருந்து ஒரு நகை கடை நடத்தும் அளவுக்கு சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
வாலாஜாபாத், தேவரியம்பாக்கம் கிரமாத்தை சேர்ந்தவர் மன்னார் (46). பின்னர் வேலை தேடி சென்னை சேத்துப்பட்டில் குடியேறிய இவர் துவக்கத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். ஆனால், அதில் போதிய வருமானம் கிடைக்காததை அடுத்து திருட்டு தொழிலை ஆரம்பித்தார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் தவிர ஒரு துணை நடிகை உட்பட பல காதலிகளும் உள்ளனர்.
துவக்கத்தில் அடிக்கடி போலீசில் சிக்கிய இவர் அங்கிருந்த மற்ற கைதிகளிடம் நன்கு பழகி அவர்களிடம் திருட்டு தொழிலை கற்றார். பூட்டை உடைப்பது, ஜன்னல் மற்றும் கிரில் கம்பிகளை சத்தமில்லாமல் கழட்டுவது என அனைத்தையும் கச்சிதமாக செய்ய அவர்களிடம் பயிற்சி எடுத்துள்ளார்.
இரவு நேரத்தில் ஊர் தூங்கிய பின்னர் தனது கைவரிசை காட்டுவதால், சென்னை போலீஸ் மத்தியில் இவருக்கு 'இரவு தனிக்காட்டு பறவை' என சங்கேத பேரும் உண்டு. இவர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் திருடுவாராம்.
திருவடுவதற்கு என்றும் தனியாக ஆட்டோ ஒன்றை வாங்கி வைத்துள்ளார். அந்த ஆட்டோவில் சென்று அதை அருகில் எங்காவது நிறுத்திவிட்டு பின்னர் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பார். அடையார் பகுதியில் இவர் திருடாத தெருக்களே இல்லை எனும் அளவுக்கு அட்டூழியம் செய்துள்ளான்.
கொள்ளையடித்த பணத்தை கொண்டு தனது சொந்த ஊரில் தோட்டம் வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழம்பூர் பொன்மாரி கிராமத்தில் ஏசி பொருத்தப்பட்ட பண்ணை வீடு, கார் என சொகுசாக வாழ்ந்துள்ளார். நடுவில் 3 ஆண்டு திருடுவதை நிறுத்திவிட்டு, பொன்மாரி கிராமத்திலே தங்கிவிட நினைத்துள்ளார்.
ஆனால், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் திருட்டு சம்பவத்துக்கு இவர் தான் காரணம் என போலீசார் இவரை மீண்டும் கைது செய்ததையடுத்து மீண்டும் தொழிலைத் துவக்கியுள்ளார். இவரை போலீசார் மூன்று முறை குண்டர் சட்டத்திலும் பிடித்து, சிறையில் அடைத்துள்ளனர்.
தான் வசிக்கும் பொன்மாரி கிராமத்தில் கொடை வள்ளலை போல் வலம் வந்துள்ள இவர் இறந்து போன ஏழைகளின் இறுதி ஊர்வலத்துக்கு பணம் செலவு செய்துள்ளார். திருமண காரியங்களுக்கு என்று உதவி கேட்டால் அள்ளித் தருவாராம்.
இவனுக்கு மன்னர் மன்னன், மாணிக்கம், இம்மானுவேல் என்று பல பெயர்களும் உள்ளது.
இந்நிலையி்ல் சென்னையில் மன்னாரின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரிக்க துவங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த சென்னை போலீஸார் 2 தனிப்படைகளை அமைத்து அவனை கைது செய்தனர்.
மன்னாரிடம் இருந்து தங்க, வைர நகைகள் மற்றும் 13 கிலோ வெள்ளி சாமான்களை மீட்டுள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம். அவர் வைத்திருந்த 3 கேமராக்கள், 3 செல்போன்கள், 5 லேப்-டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கொள்ளையடித்து சம்பாதித்த மன்னாரின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் கைப்பற்ற போலீசார் முடிவு செய்துள்ளனர்.