சைக்கிளில் வந்து மனு தாக்கல் செய்த வேட்பாளர்
நெல்லை: நெல்லை சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் இமாம் நேற்று சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேர்தல் ஜூரம் தொற்றி கொள்ள வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வாக்களர்களை கவர பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். தேர்தலுக்கு முன்பு வரை ஏசி காரில் அமர்ந்து கொண்டு கண்ணாடியை கூட இறக்காதவர்கள் தற்போது கிராமத்தில் மக்களோடு அமர்ந்து சகஜமாக டீ குடித்து வருகின்றனர்.
நேற்று நாமக்கல்லில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் காதில் பூ சுற்றி கொண்டு வந்தார். இன்று நெல்லை சமாஜ்வாடி வேட்பாளர் வித்தியாசமாக தனது கட்சி சின்னமான சைக்கிளில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
திருவனந்தபுரம் சாலையில் இருந்து கலெக்டர் அலுவலக சாலையில் நுழைந்த அவரை அங்கு பாதுகாப்பிற்காக நின்ற சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் தடுத்தி நிறுத்தினர்.
பின்னர் தான் ஒரு வேட்பாளர் என்று அறிமுகப்படுத்தி கொண்ட பிறகே செய்யது இமாமை போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து அவர் கலெக்டர் பழனி்யாண்டியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இது குறித்து செய்யது இமாம் கூறுகையில்,
எனது கட்சியின் சின்னம் சைக்கிள். அந்த சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தேன். நான் வெற்றி பெற்றால் வீட்டுக்கு ஒரு சைக்கிள் இலவசமாக வழங்குவேன் என்றார்.
பொதுவாக வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் 3 வாகனம் மட்டுமே அனு்மதிக்கப்படும். சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சைக்கிளில் மனு தாக்கல் செய்ய வந்ததால் ஒரு கார், ஒரு ஆம்னி வேன், சைககிள் ஆகியவற்றை சேர்த்து 3ஐ மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.