தேர்தல் ஊழியர்களை மிரட்டிய அதிமுகவினர் மீது புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்ற முயன்ற தேர்தல் பணி ஊழியர்களை மிரட்டிய அதிமுகவினர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சாலையில் குரூஸ்பர்னாந்து சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான குளியலறை சுவற்றில் அதிமுக போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. தேர்தல் நேரம் என்பதால் அரசு சுவர்களில் கட்சி விளம்பரம் மற்றும் போஸ்டர் ஒட்ட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இதனால் மாநகராட்சி அலுவலர்கள் அரசு சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் ஆறுமுகம், நாகராஜன், காந்திமதி, அலுவலக உதவியாளர் சந்தனராஜ், சொக்கலிங்கம், கிருஷ்ணன் ஆகியோர் குளியலறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நகர அதி்முக செயலாளர் ஹென்றி உள்ளிட்ட சிலர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்த அதிகாரிகளை மிரட்டியதோடு கிழித்த போஸ்டர்களை அதே இடத்தில் ஒட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் அலுவலர்களை பின்புறமாக இருந்து தள்ளிவிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவத்தை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.
எனவே வேறு வழி இல்லாததால் அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் போ்ஸ்டர்களை ஒட்டினர். இதனால் அவமானம் அடைந்த ஊழியர்கள் தூத்துக்குடி கோட்டாசியர் வேலாயுதத்திடம் புகார் தெரிவித்தனர்.
அவர் தேர்தல் பணியில ஊழியர்களை மிரட்டியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அலுவலரான கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். மேலும் இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் லட்சுமி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.