'ரெண்டு பேரும் கேட்கலியே'-கை கழுவிய ப.சி.!

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என இந்தியா விடுத்து வரும் கோரிக்கையை இலங்கையும், விடுதலைப் புலிகளும் கேட்கவில்லை. இலங்கை அரசு பிரச்னைக்கு போர் மூலம் தான் தீர்வு காண முடியும் என நினைக்கிறது. இலங்கை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே நல்ல முடிவாகும் என்றார்.
போரை நிறுத்தாவிட்டால் இலங்கையுடனான உறவை முறிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இது ஒரு முக்கியமான விஷயம், இதை பத்திரிகையாளர் சந்திப்பில் முடிவு செய்ய முடியாது என சிதம்பரம் பதிலளித்தார்.
மேலும் திமுக நடத்தும் இந்த பந்த் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தானே தவிர மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. காங்கிரஸ் இலங்கை பிரச்னையில் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பது தவறான குற்றச்சாட்டு.
பிரபாகரனுக்கு இந்தியா புகலிடம் கொடுக்குமா என்பதற்கு நான் பதிலளிக்க முடியாது. இது சட்டப் பிரச்சினையாகும். 1983ம் ஆண்டு முதல் இருந்து வரும் மத்திய அரசுகள் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரே நிலையைத்தான் மேற்கொண்டுள்ளன. இப்போது குறை கூறும் பாமக, அதிமுக, மதிமுக போன்றவை எல்லாம் இந்த ஆட்சிகளில் இடம் பெற்றிருந்தன என்பதை மறந்து விடக் கூடாது.
தற்போது தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக தவறான தகவலைக் கூறி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றார் சிதம்பரம்.
முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்த பந்த் போராட்டம் ஒரு நாடகம் என்று ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து கேட்டபோது, நான் சினிமாவில் இல்லை. எனக்கு இது நாடகமா, இல்லையா என்பது குறித்து தெரியாது என்றார்.
முன்னதாக திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய இடங்களில் நடந்த திமுக கூட்டணி செயல்வீர்கள் கூட்டத்தில் சிதம்பரம் பேசுகையில்,
நான் 4 ஆண்டுகள் 7 மாதம் நிதியமைச்சராக இருந்ததற்காக பெருமை அடைகிறேன். எந்த திட்டம் புதியதாக அறிவித்தாலும் நிதியமைச்சருக்குத் தொடர்புண்டு. ஒரு குடும்பத்துக்கு வருமானம் எவ்வளவு முக்கியமோ அது மாதிரி நாட்டுக்கு வளர்ச்சி முக்கியம். 9 சதவீத வளர்ச்சியை வைத்து அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
நமக்கு முக்கிய எதிரி பாஜக தான், அதிமுக அல்ல. அதிமுகவுக்கு மத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலையில்லை. கடந்த தேர்தலில் 40க்கு 40 வெற்றி கொடுத்தீர்கள். அதனால் தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதே மாதிரி இந்த முறையும் வெற்றியை தாருங்கள்.
என் மீது எந்த வழக்கும் இல்லை. வழக்கும் வராது, அதனால் என்னால் மானாமதுரை தொகுதிக்கு இழுக்கும் வராது என்றார்.
நேற்று காரைக்குடியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிதம்பரம் பேசுகையில்,
இந்தத் தேர்தலில் நமக்கு பிரதான எதிரி பாஜக தான். மேலாதிக்க மக்களின் வளர்ச்சிக்காக சிறுபான்மை மக்களை வளரவிடாமல் செய்யும் இயக்கமாக பாஜக செயல்படுகிறது என்றார்.
பின்னர் சிங்கம்புணரி, ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, பிரான்மலை, கிருங்காகோட்டை ஆகிய கிராமங்களில் அவர் பேசியதாவது:
வங்கிகளைத் திறந்து உங்களை எல்லாம் கடனாளியாக்கி விட்டேன் என்று எதிர்க்கட்சி வேட்பாளர் கூறி வருகிறார். கடன் கொடுப்பது ஒரு தவறா? தவறு என்றால் சொல்லுங்கள் இப்போதே திரும்பி சென்று விடுகிறேன். சரி என்றால் உங்களிடத்தில் வாக்குகளை கேட்கிறேன்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் மட்டும்தான் போட்டி. மத்தியில் யார் ஆண்டாலும் அதிமுகவுக்குக் கவலையில்லை. அவர்களுக்கு கவலையெல்லாம் தமிழக முதல்வர் பதவிமேல் தான் எனறார்.












Click it and Unblock the Notifications