கார்த்திக் கட்சியுடன் கூட்டணி: கிருஷ்ணசாமி
தென்காசி: மனித நேய மக்கள் கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் புதிய தமிழகம், தென்காசி தொகுதியில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
குற்றாலம்-ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளி்த்த பேட்டி:
1952 முதல் இந்தியா சுதந்திரம் பெற்று 14 தேர்தல்கள் முடிந்து விட்டது. 11 முறை தென்காசியில் காங் கட்சியும், 2 முறை அதிமுகவும், 1 முறை இ.கம்யூ கட்சிகளும் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இத்தொகுதி மக்களுக்கு இதுவரை யாரும் எதுவும் செய்யவில்லை.
தொழில் வளர்ச்சி, சாலை வசதி, கல்வி வசதி, விவசாய வசதி, போன்றவை இன்னும் 50 சதவீதம் கூட பூர்த்தியாகவில்லை. இந்தியாவில் அனைத்து துறைகளும் பின்னோக்கி செல்கிறது.
3 முறை தென்காசி தொகுதியில் போட்டியிட்டு உள்ளேன். இம்முறை சமுக ஜனநாயக கூட்டணி அமைத்து வாக்கு வங்கு கூட்டணியை அமைத்துள்ளேன். எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அனைத்து ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட மக்கள் ஆதரவு எனக்கு பெருகி வருகிறது. மேலும் நான் வெற்றி பெற்றால் தென்காசி தொகுதியை திருப்பூர் போன்ற தொழில் நகரமாக்குவேன்.
எங்கள் கூட்டணியில் ச.ம.க சேர்ந்துள்ளது. மேலும் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் ஆதரவு நல்கி உள்ளது. இது எங்களுக்கு கூடுதல் பலம்.
வரும் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றேன். அதன் பின்பு தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம். மேலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றார் அவர்.