For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ்ர்மூழ்கி மூலம் பிரபாகரன் தப்பலாம்-ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

Prabhakaran
கிளிநொச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனே தற்போது நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளார் என்றும், அவரே தனது வீரர்களை வழி நடத்தி வருகிறார் என்றும் சமீபத்தில் ராணுவத்தால் பிடிக்கப்பட்ட தயா மாஸ்டர் தெரிவித்துள்ளாராம். மேலும் கடல் மார்க்கமாக பிரபாகரன் தப்ப வாய்ப்புள்ளதாகவும் தயா மாஸ்டர் கூறியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் ராணுவத்திடம் சிக்கினார். உடன் தமிழ்ச்செல்வனின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜும் பிடிபட்டார். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து ராணுவம் விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில் கிடைத்த விவரங்கள் குறித்து இன்று கிளிநொச்சியில் 58வது பிரிவு ராணுவ கமாண்டர் சாவேந்திர டிசில்வா தெரிவித்தார்.

அவர் கூறுகையில், பிரபாகரனே தற்போது நேரடியாக போரை வழி நடத்தி வருகிறார். அவர்தான் போரை நடத்தி வருவதாக நாங்கள் முன்பு சந்தேகித்தோம். தற்போது தயா மாஸ்டர் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் பிரபாகரனுடன் அவரது மகன் சார்லஸ் அந்தோணி, உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற் படைத் தலைவர் சூசை ஆகியோர் உள்ளனர்.

அனைவரும் போரற்ற பகுதியில் மக்களுடன் மக்களாக உள்ளனர்.

பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடல் மார்க்கமாக தப்பும் திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. சமீபத்தில்தான் அவர்கள் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இதற்காக வாங்கியுள்ளனர்.

பிரபாரனுக்கு தற்போது அவரது மகன் தவிர சூசையும், பொட்டு அம்மானும் மட்டும்தான் முழு ஆதரவாக உள்ளனர். மற்ற தலைவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தப்பி விடும் மன நிலையில் உள்ளதாக தயா மாஸ்டர் கூறியுள்ளார்.

இந்த நிமிடம் வரை தப்பி ஓடும் எண்ணத்தில் பிரபாகரன் இல்லை என்றாலும் கூட வாய்ப்பு கிடைத்தால் அவர் தப்புவார் என்றும் தயா மாஸ்டர் கூறியுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு பிரபாகரன் இருக்கும் இடத்தை ராணுவம் நெருங்கியது. ஆனால் அதற்குள் பிரபாகரன் அங்கிருந்து தப்பி விட்டார் என்றார் சாவேந்திரா டிசில்வா.

விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளையும் தற்போது இலங்கைப் படைகள் பிடித்து விட்டன. தற்போது வெறும் எட்டு கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பகுதி வழியாக மட்டுமே கடல் மார்க்கமாக யாரும் தப்ப முடியும் என்பதால் அந்தப் பகுதியில் கடற்படையினர் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல முல்லைத்தீவின் வட பகுதியிலும் கடற்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடற்படை ஹெலிகாப்டர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நீர்மூழ்கியில் தப்பலாம்-ராணுவம்:

இதற்கிடையே ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், சரணடைந்த தயா மாஸ்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தப்பிக்கலாம் என்று தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும் பிரபாகரனுடன் 500 மிகச் சிறந்த விடுதலைப் புலி வீரர்கள் உள்ளதாகவும் இவர்கள் பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களைப் போல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தவிர மேலும் 500 வீரர்கள் சாதாரண உடைகளில் போர்க்களப் பகுதியில் உள்ளனர். மக்களுடன் மக்களாக இவர்கள் கலந்திருக்கின்றனர். கொரில்லாத் தாக்குதலில் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள்.

இதுதவிர மிச்சம் உள்ள விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானதுதான் என்றாலும் கூட அவர்கள் வசம் இன்னும் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன. மிகவும் குறுகலான பகுதியில் குறுக்கி விட்டாலும் கூட புலிகள் இன்னும் கடுமையாக போராடுகிறார்கள், தாக்குகிறார்கள் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காராவே ஒத்துக் கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் தற்போது உள்ள எட்டு கிலோமீட்டர் பரப்பளவு பகுதியும் அகன்ற பரப்பு கிடையாது. நீளமான வால் போன்ற பகுதியே இது.

இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள் இன்னும் உள்ளனர். இவர்கள் இருக்கும் பகுதியைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகையிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளை குறிப்பாக அடையாளம் காண முடியாததால்தான் குத்து மதிப்பாக மக்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கி கொன்று வருகிறது இலங்கைப் படை.

ஞாயிற்றுக்கிழமைக்குள் பிரபாகரனை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் உள்ளது இலங்கைப் படை. ஆனால் பிரபாகரனைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பது நிபுணர்களின் கருத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X