தமிழர் மறுவாழ்வு-உலக நாடுகளுக்கு ஐநா கோரிக்கை
கொழும்பு: இலங்கையில் போரில் சிக்கி இடம் பெயர்ந்துள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கும், தேவைக்கும் தேவையான நிதியை உலக நாடுகள் தாராளமாக வழங்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
வவுனியா நகரில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களின் முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் ஐ.நா. மனிதாபிமான விவகார பிரிவு ஒருங்கிணைப்பாளர் நீல் புனே. கொழும்பு திரும்பிய அவர் உலக நாடுள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையானவற்றை செய்ய தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுததுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் தற்போது தமிழர்கள் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் போர் பாதித்த பகுதியிலிருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. சரியான சத்துணவு இல்லாமல் இளம் தாய்மார்களும், குழந்தைகளும், பெண்களும் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்றனர். பல மாதங்களாக ஒரே உடையில், காயங்களுடன் அவர்கள் சொல்லொணாத் துயரத்தில் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர், சுகாதாரம், சத்துணவு, பாதுகாப்பான இருப்பிடம், உடைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும், குழந்தைகளை மன ரீதியாக தயார்படுத்தி அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கவும் ஆர்வமாக உள்ளோம். இயல்பு நிலைக்கு அவர்களைக் கொண்டு வர வேண்டிய மிகப் பொறுப்பு நம் முன் உள்ளது.
எனவே உலக நாடுகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையானவற்றை செய்ய தாராள நிதியுதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுததுள்ளார்.
6500 தமிழர்கள் படுகொலை-ஐ.நா:
இதற்கிடையே, கடந்த 3 மாதங்களில் மட்டும் இலங்கை ராணுவத் தாக்குதலில் 6500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் 6432 பேர் கொல்லப்ட்டுள்ளனர். 13,946 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. கணக்கு கூறுகிறது.
இந்த அறிக்கையை அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. அனுப்பி வைத்துள்ளதாம். அதே சமயம் இதை பகிரங்கமாக வெளியிடவில்லை ஐ.நா.
ஒரு நாளைக்கு சராசரியாக 33 பேர் இறக்கிறார்கள். இது ஜனவரி மாத கணக்கு. ஆனால் அதன் பின்னர் தினசரி 116 பேர் இறந்து வருவதாக ஐ.நா. கூறுகிறது.
மேலும், கொல்லப்பட்டவர்களில் 5500 பேர் அரசு அறிவித்த போரற்ற பகுதிகளில் இருந்தவர்கள் என்பதுதான் இலங்கை ராணுவத்தின் கொலை வெறிக்கு முக்கியமான சான்றாக விளங்குகிறது.
ஐ.நாவை அனுமதிக்க மாட்டோம்-இலங்கை:
இலங்கையில் நிலவும் சூழ்நிலை தனக்கு கவலை அளிப்பதாகவும்
போர் பகுதியில் நிலைமையை கண்காணிக்க ஐ.நா. குழுவை அனுப்பி வைக்க இருப்பதாகவும் ஐ.நா. தலைவர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இதற்கு அதிபர் ராஜபக்சேயின் தம்பியும் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபயா ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில்,
போர் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு ஐ.நா. மனிதாபிமான குழு செல்வது சரியானது அல்ல. அது பொருத்தமாகவும் இருக்காது.
போர் பகுதியில் தற்போது செஞ்சிலுவை சங்கம் காயமடைந்தவர்களை வெளியேற்றி வருகிறது. பாதுகாப்பு பகுதியின் தென் பகுதியை நோக்கி ராணுவம் மெதுவாக முன்னேறி செல்கிறது. கனரக ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. துப்பாக்கிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றார்.
அப்படியானால் ஐ.நாவை ஏன் அனுமதிக்க மறுக்க வேண்டும்?












Click it and Unblock the Notifications